தமிழகத்தில் இன்று முதல் வெற்றிக் கொடி பறக்கிறது: உத்தியோகப்பூர்வமாக கொடியேற்றி வைத்தார் விஜய்

தமிழகத்தில் இன்று முதல் வெற்றிக் கொடி பறக்கிறது: உத்தியோகப்பூர்வமாக கொடியேற்றி வைத்தார் விஜய்

Oruvan

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அந்த கட்சியின் தலைவரான விஜய் அறிமுகம் செய்து கொடியேற்றி வைத்தார்.

அறிமுக நிகழ்வு பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

சிவப்பு, மஞ்சள் ஆகிய இரு நிறங்களுடன் இரண்டு போர் யானைகள், நடுவில் வாகை மலருடன் இருக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.

Oruvan

இந்த விழாவில் கட்சியை பிரபலப்படுத்தும் வகையில் பிரசார பாடல் அடங்கிய குறுந்தகடு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் தவெக தொண்டர்கள் இவ்வாறு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

“நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணிலிருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன்.

நமது அன்னைத் தமிழ் மொழியைக் காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம். மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன். மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதிப் பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமை ஆற்றுவேன் என உறுதி அளிக்கின்றேன்.

சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு. சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமார உறுதி கூறுகின்றேன்”

பாதுகாப்பு காரணம் கருதி குறைந்த அளவு நிர்வாகிகளே கூட்டத்தில் பங்கேற்க கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு மட்டும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This