ஜனாதிபதி தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் இடையூறு?

ஜனாதிபதி தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் இடையூறு?

கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டணியால் அறிவிக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக ஜனாதிபதி தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் இடையூறு ஏற்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் மீண்டும் பேச்சுவார்தையில் ஈடுபடுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இன்று தொடக்கம் ஒருவார காலத்திற்கு பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டணி அறிவித்துள்ளது. இந்நிலையில் கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டணியுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான சகல வேலைகளையும் எவ்வித பிரச்சினையுமின்றி மேற்கொள்வதற்கு கிராம உத்தியோகத்தர் சங்கங்களின் கூட்டமைப்பு முன்னதாக இணக்கம் தெரிவித்திருந்த போதிலும், இன்று தொடக்கம் பணிப்புறக்கணிப்பை
மேற்கொள்ளப்போவதாக கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டணியின் இணைத் தலைவர் நந்தன ரணசிங்க நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், இன்றும் மற்றும் நாளையும் அனைத்து கடமைகளில் இருந்தும் விலகிக் கொள்வதுடன், நாடு தழுவிய ரீதியில் ஒரு வார காலப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக கிராம சேவையாளர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அத்துடன் இன்று காலை பொதுநிர்வாக அமைச்சுக்கு முன்பாக மௌன போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக நந்தன ரணசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
Share This