வடக்கு, கிழக்கு பிரச்சினைகளை தீர்க்க தயார்: சுமந்திரனை சந்தித்த நாமல்

வடக்கு, கிழக்கு பிரச்சினைகளை தீர்க்க தயார்: சுமந்திரனை சந்தித்த நாமல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை இன்று சனிக்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது வடக்கு கிழக்கில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் மாவட்டங்களின் அபிவிருத்தி குறித்து இருவரும் கலந்துரையாடியதாக பொதுஜன பெரமுனவின் மத்திய குழுவில் வட மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்யும் கீதநாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து அப்பகுதி மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும் இளைஞர்களுக்கு வாழ்வாதாரம் மற்றும் சிறந்த எதிர்காலத்தை வழங்குவதற்கும் தாம் தயார் என சுமந்திரனிடம் நாமல் ராஜபக்ச தெரிவித்ததாக காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியை பொருட்படுத்தாது வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள குடிமக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருப்பதை உறுதி செய்ய விரும்புவதாகவும், இந்த மாவட்டங்களை சர்வதேச வர்த்தக மையங்களாக மேம்படுத்தவும் விரும்புவதாக நாமல் ராஜபக்ச கூறினார்.

மேலும் அனைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அலுவலகத்தில் சந்தித்து குறைகளை விரிவாக கலந்துரையாடுமாறும் கேட்டுக்கொண்டார்.

இந்த விடயங்கள் தொடர்பில் நாளை கூடவுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மத்தியக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்படும் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்” என்றார்.

மேலும் வடக்கு, கிழக்கு மக்களுக்காக பாடுபடும் ராஜபக்சவின் முயற்சிகளுக்கும் காசிலிங்கள் நன்றி தெரிவித்தார்.

CATEGORIES
Share This