டயஸ்போறா தமிழ் அமைப்புகள் நிதி வழங்கியதா?: போராடும் தாயிடம் பயங்கரவாத பொலிஸார் கேள்வி

டயஸ்போறா தமிழ் அமைப்புகள் நிதி வழங்கியதா?: போராடும் தாயிடம் பயங்கரவாத பொலிஸார் கேள்வி

யுத்தத்தின் போதும் அதன் பின்னரான சூழலிலும் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவினர்களின் தாயொருவர் இலங்கைப் பயங்கரவாதப் பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கொழும்பில் இருந்து அனுப்பட்ட கோப்புக்கு அமைய மட்டக்ளப்பு பொலிஸார் விசாரணை நடத்தியதாக காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவி அமல்ராஜ் அமலநாயகி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஜூலை 30ஆம் திகதி காலை 9.30 முதல் மூன்றரை மணித்தியாலங்களுக்கு மேலாக பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் விசாரணைப் பிரிவுப் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக கடந்த 30ஆம் திகதி மாலை அவர் மட்டக்களப்பில் செய்தியாளர்களிடம் விளக்கமளித்துள்ளார்.

கொழும்பில் இருந்து அனுப்பப்பட்டதாகக் கூறி பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் (CTID) மட்டக்களப்பு பிரிவு அதிகாரிகள், தம்மிடம் காண்பித்த சில கடிதங்கங்கள் அதாவது சிங்கள கடிதத்தில், தான் பயங்கரவாதி என அடையாளப்படுத்தப்பட்டிருந்ததாக செய்தியாளர்களிடம் சுட்டிக்காட்டினார்.

Oruvan

முழுமையாக எங்களை ஒரு பயங்கரவாதியாக முத்திரை குத்தி எங்களுக்கு உளவியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தி, தமது தொடர் போராட்டத்தை நிறுத்த வேண்டும் என்பதே பொலிஸாரின் இலக்கு எனவும் அவர் குறிப்பிட்டார்.

கேள்வி எழுப்பினார்

அதேவேளை ஜூலை கடைசி வாரத்தில் வடக்கு கிழக்கு மாகாணத்தின் எட்டு மாவட்டங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி போராட்டம் நடத்தப்பட்டது.

ஜூலை 30ஆம் திகதி, வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு தலைமைத் தாங்கிய வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் வவுனியா மாவட்டத் தலைவி சிவானந்தன் ஜெனிட்டா, ஜனநாயக ரீதியில் போராடும் தமிழ்த் தாய்மார்களிடம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் எந்த அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்படுகின்றன என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

ஜனநாயக ரீதியில் எமது உறவுகள் எங்கே எனக் கேட்டு போராடிக் கொண்டிருக்கின்ற தாய்மார் மீது அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்படுகின்றது என்றும் கூட்டிக்காட்டியுள்ளார்.

Oruvan

ஒழிக்கப்பட்ட விடுதலைப் புலிகளுடன் உறவு

15 வருடங்களுக்கு முன்னர் அழிக்கப்பட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்த விடுதலைப் புலிகளுடன் அவருக்கு தொடர்புள்ளதா என பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் மட்டக்களப்புப் பிரிவினர் தம்மிடம் கேள்வி எழுப்பியதாக வல்லிபுரம் அமலநாயகி என அழைக்கப்படும் அமலராஜ் அமலநாயகி சுட்டிக்காட்டுகிறார்.

சர்வதேசத்திலும் உள்நாட்டிலும் புலிகளோடு உங்களது தொடர்புகள் எவ்வாறு இருக்கிறது, அவர்களுடன் நீங்கள் தொடர்பில் இருக்கின்றீர்களா எனக் கேட்டார்கள்.

நான் சொன்னேன், தடை செய்யப்பட்ட இயக்கம் அல்லது அந்த இயக்கம் இல்லையெனக் கூறி நீங்கள்தானே சொன்னீர்கள். பின்னர் எப்படி புலிகள் என்ற பெயர் வருமென எனக்குத் தெரியாது என்றேன்.

அத்துடன் அதனை நீங்கள்தான் தேடிப் பார்க்க வேண்டும். அவ்வாறு புலிகள் என்ற பெயர் சொல்லிக்கொண்டு வருபவர்களுடன் எமக்குத் தொடர்பு இல்லை.

அந்தப் பக்கத்தை நாங்கள் பார்க்கவும் இல்லை. அதனை நீங்கள் தேடிக் கண்டுபிடியுங்கள் எனச் சொன்னதாக அவர் விபரித்தார்.

புலம்பெயர் நிதியுதவி

வலிந்து காணாமலாக்கப்பட்ட தனது அன்புக்குரியவர்களைக் கண்டறியும் நீண்ட போராட்டத்திற்கு புலம்பெயர் நாடுகளில் இருந்து பணம் கிடைக்கிறதா என தன்னிடம் கேள்வி எழுப்பிய அதிகாரிகள், புலிகள் அமைப்பை மீள உருவாக்க முயற்சிப்பவர் என்ற கோணத்திலும் தன்னிடம் விசாரணை நடத்தியதாகவும் சொன்னார்.

புலம்பெயர் அமைப்புகள் நிதி வழங்குகிறார்களா எனக் கேட்டபோது அவ்வாறு எந்த நிதியும் எங்களுக்கு வருவதில்லை. நிதி வழங்கும் புலம்பெயர் அமைப்புகள் இருந்தால் அவர்களின் தொடர்புகளை வழங்குமாறு நானும் பதிலுக்குத் திருப்பிக் கேட்டேன்.

ஆகவே இவ்வாறான விசாரணைகளை மேற்கொள்வதன் மூலம் 2017 பெப்ரவரி மாதம் முதல் தமது பிள்ளைகளுக்காக நீதி கோரி தொடர்ச்சியாக போராடும் தாய்மார்களுக்கு அச்சம் ஏற்படும் என அரசாங்கம் நம்புவதாக வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தவிசாளர் சுட்டிக்காட்டுகிறார்.

Oruvan

பயங்கரவாதத் தடுப்புப் மற்றும் விசாரணைப் பிரிவினர் தாம் பிறந்த வைத்தியசாலை முதல் தமது குடும்ப உறுப்பினர்கள் அனைவரினதும் தனிப்பட்ட தகவல்களைப் பெற்றதாகக் கூறும் அமலநாயகி, பல்வேறு சந்தர்ப்பங்களில் தாம் நடத்திய போராட்டங்கள் தொடர்பான ஆறு புகைப்படங்களைக் காட்டி அவைத் தொடர்பான தகவல்களை கேட்டதாகவும் குறிப்பிடுகின்றார்.

பெறுமதி இரண்டு இலட்ச ரூபாயா?

கடந்த ஜூலை 29ஆம் திகதி திருகோணமலை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் திருகோணமலை மாவட்டத் தலைவி செபஸ்டியன் தேவி, மட்டக்களப்பு மாவட்டத் தலைவி அமலநாயகி போன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஏனைய தாய்மார்களுக்கும் பயங்கரவாத பொலிஸாரால் அழைப்பு விடுக்கப்படலாம் என எச்சரித்தார்.

மன்னாரில் ஜூலை 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு தலைமைத் தாங்கிய, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் மன்னார் மாவட்டத் தலைவி மனுவெல் உதயச்சந்திரா, காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளின் பெறுமதி இரண்டு லட்சம் ரூபாயா என, காணாமற்போனோர் பற்றிய அலுவலகத்திடம் (OMP) கேள்வி எழுப்பினார்.

“நாங்கள் வீதியில் நின்று போராடுகிறோம். ஆனால் யாருமே எங்களை திரும்பிப் பார்ப்பது போல் தெரியவில்லை. நீதி கிடைக்குமா தெரியவில்லை. ஒவ்வவொரு அம்மாக்களும் இறந்துகொண்டிருக்கின்றார்கள். அப்படி இறக்கையில் ஒவ்வொரு சாட்சிகளும் இறந்து கொண்டு போகுது.

அதைத்தான் இந்த அரசாங்கமும் விரும்புகிறது. OMP எனப்படும் காணாமல் போனோரைக் கண்டறியும் அலுவலகத்தை அமைத்து அதில் உண்மையை கண்டறிவதாக சொன்னார்கள்.

ஆனால் உண்மையை கண்டறிய அவர்கள் என்ன செய்தார்கள். நட்டஈட்டுக்காக மாத்திரமே ஓஎம்பி முன்னிற்கிறது. நட்டஈட்டை பெற்றுக்கொண்டு இந்த அம்மாக்கள் வீட்டில் இருக்க வேண்டுமென்றே அவர்கள் நினைக்கின்றார்கள்.

எமது பிள்ளைகளின் பெறுமதி இரண்டு இலட்சமா? நாங்கள் நான்கு இலட்சம் தருகிறோம் எங்கள் பிள்ளைகளை தேடித்தாருங்கள் என்றுதான் நாம் கோருகின்றோம் என்று அவர் விபரித்தார்.

CATEGORIES
Share This