‘தாரா’ வை இங்கிலாந்தில் இருந்து மீண்டும் இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை!

‘தாரா’ வை இங்கிலாந்தில் இருந்து மீண்டும் இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை!

காலனித்துவ காலத்தில் பிரித்தானியாவினால் நாட்டிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட தாரா சிலை உட்பட பல தொல்பொருட்கள் இலங்கைக்கு மீள கொண்டு வரப்படும் என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய இராச்சியத்தினால் நாட்டிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட பல தொல்பொருட்கள் மீண்டும் நாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளதாக அமைச்சர் விக்கிரமநாயக்க தெரிவித்தார்.

” நமக்கு சொந்தமான புராதன பொக்கிஷங்களை மீண்டும் கொண்டு வர நாங்கள் பணியாற்றி வருகிறோம், மேலும் நெதர்லாந்தில் இருந்து இதே போன்ற பல பொருட்களையும் நாங்கள் பெற்றுள்ளோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டுக்கும் கலாசாரத்துக்கும் ஏற்ற கல்வி முறையொன்று மக்கள் மனதில் தமது நாட்டைப் பற்றிய பெருமிதத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட வேண்டுமென அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தாரா சிலை
தாரா சிலை என்பது இலங்கையின் 7- 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தங்க முலாம் பூசப்பட்ட ஒரு வெண்கலச் சிலையாகும். இது பௌத்த சமய பெண் தெய்வமான தாராவின் சிலையாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரித்தானியர் கண்டியின் கடைசி மன்னரை வென்று கண்டி இராச்சியத்தை கைப்பற்றினர். அப்போது இலங்கையின் பிரித்தானியத் தேசாதிபதியாக இருந்தவர் ராபர்ட் பிரௌன்ரிக் என்பவர். இவரது பதவிக்காலம் முடிந்து இவர் பிரிட்டன் சென்றபோது தன்னுடன் இந்தச் சிலையையும் கொண்டு சென்றார். பின்னர் இச்சிலையை இவர் 1830 இல் பிரித்தானிய அருங்காட்சியகத்துக்கு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This