பிரபாகரன் மீது பற்றுடைய அனைவரும் எம்முடன் இணையுங்கள்: கருணா கோரிக்கை

பிரபாகரன் மீது பற்றுடைய அனைவரும் எம்முடன் இணையுங்கள்: கருணா கோரிக்கை

தமிழீழ தேசிய தலைவருடன் தமிழ் மீது பற்றுடைய அனைவரும் எம்மோடு இணைய வேண்டும் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று அனுப்பிவைத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழீழ தேசிய தலைவரினால் இனங்காணப்பட்டு கை காட்டப்பட்டு அரசியல் தலைவராக இருந்து இயற்கை எய்திய சம்பந்தன் அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினை பொறுப்பெடுத்து நடத்துவார் என்ற நம்பிக்கையில் அவரிடம் கையளித்தார்.

இரண்டாம் கட்ட தலைவர் கூட இல்லாமல் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழரசு கட்சி அனைத்தும் இன்று சிதறடிக்கப்பட்டு இருக்கிறது.

உருளைக்கிழங்கு மூடை எல்லாம் கட்டவிழ்த்து அவிண்டு ஓடிட்டுது என்று கூறுகின்ற நடப்புக்களும் நடக்கிறது. தலைவர் பிரபாகரன் கூறிய வார்த்தையை தற்போது அமைச்சராக உள்ள டக்ளஸ் நையாண்டியாக கூறியிருந்தார்.

தமிழீழ தேசிய தலைவரால் கட்டப்பட்ட மூடை கட்டவிழ்ந்தது உண்மை தான், அதனால் தான் அதனை கட்டுவதற்கு நான் வந்திருக்கின்றேன்.

இனி எங்களுக்கு கீழே வடக்கு கிழக்கு அரசியல் நடவடிக்கை நடைபெறும் என்பதனை ஆணித்தரமாக கூறிக்கொள்கின்றேன்.

15 வருடங்கள் நான் இருந்து பார்த்தேன். எங்களால் கையளிக்கப்பட்ட அரசியல் பிரிவு எங்கள் தலைவரால் மக்களின் எதிர்காலம், பொருளாதாரம், மக்களின் வாழ்வு என்பவற்றை 30 வருட கால யுத்தத்தின் பின்னர் வளர்த்தெடுக்கும் நிலையே இருந்தது.

இங்கு திருடுவதும் சாப்பிடுவதுமான நிகழ்வுதான் நடந்ததே, இன்று கூட அவர்கள் பிரிந்து போகவே இருக்கின்றார்கள்.

தலைவரால் அவிழ்த்துவிடப்பட்ட மூடைகளை கட்டவேண்டிய கடப்பாடு எனக்கு மட்டுமே உள்ளது. இது கருணா அம்மான் காலம், எல்லோரும் எதிர்பார்த்திருங்கள்.

சிறிய அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள் என அனைவரும் எம்மோடு இணைய வேண்டும்.

தமிழ்தேசிய தலைவருடன், தமிழ் மீது பற்றுடைய அனைவரும் எம்மோடு இணையவேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This