வேட்பாளர் ஒருவரை நிறுத்துவோம்: சீனாவில் இருந்து தாயகம் திரும்பிய மஹிந்த கூறுவதென்ன?

வேட்பாளர் ஒருவரை நிறுத்துவோம்: சீனாவில் இருந்து தாயகம் திரும்பிய மஹிந்த கூறுவதென்ன?

எதிர்வரும் 17ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அரசியலமைப்பின் பிரகாரம் அதிகாரம் கிடைக்கும்.

அதன் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஏற்பாடுகளை செய்யும் பணியில் தேர்தல்கள் ஆணைக்குழு ஈடுபட்டுள்ளது.

அரச உத்தியோகஸ்தர்கள் மற்றும் அரச அச்சகத்துடன், ஆணைக்குழு கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையில் தேர்தலில் களமிறங்கவுள்ள வேட்பாளர்கள் அனைவரும் பிரசார நடவடிக்கைகளையும் ஆரம்பித்துவிட்டனர்.

ஆளுங்கட்சி மாத்திரமே பிரசார நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்கிவந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாத்தறையில் இடம்பெற்ற கூட்டத்தின் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது பிரசார நடவடிக்கையை ஆரம்பித்துவைத்துள்ளார்.

என்றாலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் வேட்பாளர் தொடர்பில் இன்னமும் இறுதி முடிவுகள் எடுக்கப்படவில்லை என்பதுடன், அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் இவ்வாரம் ரணில் விக்ரமசிங்கவுடன் தீர்மானமிக்க சந்திப்பொன்றில் ஈடுபட உள்ளனர்.

இந்த நிலையில் சீனா சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று செவ்வாய்க்கிழமை தாயகம் திரும்பினார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், பொதுஜன பெரமுன சார்பில் வேட்பாளர் ஒருவரை நிறுத்தி பார்போம் எனக் கூறினார்.

இந்தக் கருத்து ரணில் விக்ரமவிங்கவுக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் இருக்கும் முரண்பாட்டை வெளிப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், ரணில் விக்ரமசிங்கவுக்கும் எமக்கும் எவ்வித முரண்பாடுகளும் இல்லை என்றும் வேட்பாளர் யாரென கட்சியே முடிவெடுக்கும் என்றும் அவர் கூறினார்.

CATEGORIES
Share This