அமெரிக்க தூதுவரை சந்தித்த த.மு.கூ.: அரசியல், பொருளாதார விவகாரங்கள் குறித்து ஆலோசனை

அமெரிக்க தூதுவரை சந்தித்த த.மு.கூ.: அரசியல், பொருளாதார விவகாரங்கள் குறித்து ஆலோசனை

இலங்கைக்கான அமெரிக்க தூதுதர் ஜூலி சாங் தலைமையிலான குழுவினருக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரின் இல்லத்தில் இடம்பெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் எம். உதயகுமார் உட்பட அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

மலையகத் தமிழ் மக்களது அரசியல், சமூக, பொருளாதார விடயங்கள் தொடர்பில் இதன்போது இரு தரப்பினரும் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதுடன், நாட்டின் சமகால அரசியல் குறித்தும் ஆராய்ந்துள்ளனர்.

இந்த சந்திப்பு தொடர்பில் மனோ கணேசன் தெரிவித்தாவது,

இலங்கையின் பன்னிரண்டு மாவட்டங்களில் பரந்து வாழும் மலையக மக்களை, இந்நாட்டில் முழுமையான குடி உரிமை கொண்ட மக்களாக மாற்றும் நோக்கில், மலையக சிவில் சமூகத்தின் ஒத்துழைப்புடன் தமிழ் முற்போக்கு கூட்டணி வகுத்து வரும் வரை-பாதை (Road Map) எழுத்து மூலமான ஆவணம் அமெரிக்க தூதுவரிடம் கையளிக்க பட்டது.

வாழ்வாதார காணி, வதிவிட காணி, கல்வி, தொழில் பயிற்சி, நில சார்பற்ற சமூக சபை ஆகிய முன்னுரிமை விடயங்கள் பற்றிய விபரங்கள் இந்த ஆவணத்தில் அடங்கி உள்ளன.

தினக்கூலி தொழிலாளர்கள், பெருந்தோட்ட துறையில் பங்காளர்களாக முறை மாற்றம் பெறல், பெருந்தோட்ட துறையில் வாழ்கின்ற அனைத்து நிலமற்ற குடும்பங்களுக்கு வதிவிட காணி வழங்கள், கல்வி துறை தொடர்பில் விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம், தொழில் நுட்பம் ஆகிய பாடங்களுங்கான விசேட ஆசிரியர் பயிற்சி கல்லூரி அமைத்தல், மலையக பெண்களுக்கான தாதியர் பயிற்சி கல்லூரி அமைத்தல் மற்றும் உலகளாவிய நாடுகளில் பரந்து வாழும் சிறுபான்மை இனத்தவர் மத்தியில் அமைய பெற்றுள்ள நில சார்பற்ற சமூக சபைகள் பற்றிய அனுபவங்களை பகிர்த்து கொள்ளல் ஆகியவை பற்றியும் கலந்துரையாடபட்டன.

மலையக மக்கள் இலங்கையில் மிகவும் பின் தங்கிய பிரிவினாரக இருப்பதை தாம் ஏற்று கொள்வதாகவும், அவர்களுக்கு விசேட ஒதுக்கீட்டு திட்டங்கள் தேவை என்பதை தம் அறிந்துள்ளதாகவும் அமெரிக்க தூதுவர் தெரிவித்தார்.

மேலும், தற்போது, அமெரிக்க அரசின் சார்பில் மலையக மக்களின் நலவுரிமைகள் தொடர்பில் முன்னெடுக்க படுகின்ற வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் விளக்கி கூறி அது தொடர்பான எழுத்து மூலமான ஆவணம் ஒன்றையும் அவர் எமக்கு கையளித்தார்.

எம் இடையே ஆன இந்த கலந்துரையாடலை மென் மேலும் தொடர தான் விரும்புவதாகவும், மலையக மக்களுக்கு இன்னமும் உதவிடும் சந்தர்ப்பங்களை எதிர்நோக்க அமெரிக்க அரசு விரும்புகிறது எனவும் அமெரிக்க தூதுவர் தெரிவித்ததாக மனோகணேசன் கூறியுள்ளார்.

இந்த சந்திப்பில் மலையக சிவில் அமைப்புகளின் பிரிதிநிதிகளும், பேராசிரியர்களும் கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This