இலங்கையில் சிக்கன நடவடிக்கையால் ஏழைகள் பாதிப்பு: ஐநா மனித உரிமைகள் ஆணையர் கவலை

இலங்கையில் சிக்கன நடவடிக்கையால் ஏழைகள் பாதிப்பு: ஐநா மனித உரிமைகள் ஆணையர் கவலை

இலங்கையில் சிக்கன நடவடிக்கைகளின் தாக்கம் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் கவலை வெளியிட்டுள்ளார்.

மனித உரிமைகள் பேரவையின் 56வது அமர்வில் கலந்துகொண்டு உலகளாவிய ரீதியிலான புதுப்பிப்புகளை வழங்கி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “கடந்த மூன்று தசாப்தங்களில் உலகளவில் சமத்துவமின்மையில் பாரிய இடைவெளி ஏற்பட்டுள்ளதாக” குறிப்பிட்டுள்ளார்.

ஏனெனில் கோவிட் தொற்றின் போது செல்வந்த நாடுகளை விட ஏழ்மையான நாடுகள் கடுமையான பொருளாதார பாதிப்புகளை சந்தித்ததாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த வகையில், 2019ஆம் ஆண்டில் இருந்ததை விட 4.8 பில்லியன் மக்கள் ஏழைகளாக உள்ளனர் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், உலகளவில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான செல்வ இடைவெளி 100 டிரில்லியன் அமெரிக்க டொலர்கள் என்றும் ஐநா ஆணையாளர் டர்க் கூறியுள்ளார்.

இதனிடையே, இலங்கையின் மேக்ரோ பொருளாதார நிலைமை மேம்பட்டுள்ள நிலையில், பொருளாதார நெருக்கடியின் தாக்கங்களும், அதனுடன் தொடர்புடைய சிக்கன நடவடிக்கைகளும் ஏழ்மையான மக்களை அதிகம் பாதிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், 2021 மற்றும் 2023 க்கு இடையில், வறுமை விகிதம் 13.1 முதல் 25.9 சதவிகிதம் வரை இரட்டிப்பாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, ஆக்ஸ்பாமின் கூற்றுப்படி, இந்த தசாப்தத்தின் தொடக்கத்தில் இருந்து உலகின் ஐந்து பணக்கார பில்லியனர்களின் செல்வம் இரட்டிப்பாகியுள்ளதுடன், மனிதகுலத்தில் 60 சதவீதம் பேர் ஏழைகளாக மாறியுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

CATEGORIES
Share This