அநுர ஜனாதிபதியாக தெரிவான அன்றிரவே நாடாளுமன்றம் கலைப்பு

அநுர ஜனாதிபதியாக தெரிவான அன்றிரவே நாடாளுமன்றம் கலைப்பு

இலங்கைத் தீவில் பல தேர்தல்கள் நடந்துள்ளன. ஆட்சி மாற்றங்களும் இடம்பெற்றுள்ளன. தேர்தல்கள் நடைபெற்று ஆட்சிமாற்றங்கள் காலத்துக்கு காலம் இடம்பெற்றுள்ள போதிலும் மக்களின் வாழ்வில் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை என ஜே.வி.பி எனப்படும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரிகளின் மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு மேலும் உரையாற்றிய அநுரகுமார திஸாநாயக்க,

”அரசாங்கங்கள் மாறிய போதும் ஊழல் – மோசடிகள் நிறுத்தப்பட்டதா? இல்லை. மாறாக ஊழல் – மோசடிகள் செய்யும் அணியினரே மாறினர். சட்டம் மீறப்படுவது நிறுத்தப்பட்டதா? இல்லை. ராஜபக்சர்களின் ஆட்சியில் பிரபல்யமானவர்கள் சட்டத்துக்கு அடிப்பணியவில்லை. ரணிலின் ஆட்சியிலும் அவ்வாறுதான்.

பாரம்பரியமான குடும்ப ஆட்சி மாறியதா? இல்லை. வரலாற்றில் முதல் முறையாக செல்வந்த வர்கத்தின் ஆட்சி வீழ்த்தப்பட்டு பொது மக்களின் கைகளில் அதிகாரம் கைமாறும் சந்தர்ப்பமொன்று உருவாக உள்ளது.

தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற அன்று இரவே நாடாளுமன்றத்தை கலைத்துவிடுவோம். ஒருநாள்கூட பழைய நாடாளுமன்றம் இருக்காது.

இதுவரை காலம் தந்தையிடமிருந்து மகனுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் இடையில் பரிமாறியிருந்த எம்.பி பதவிக்கு இலவச கல்வி முறையில் கற்ற புதிய தலைமுறையினர் தெரிவாகுவர் என்பதுடன், நாடாளுமன்றத்தை பிரிதிநிதித்துவப்படுத்துவர்கள் சாதாரண மக்களாக இருப்பர்.

அதன் பின்னர் குறுகிய காலத்திற்குள் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடத்தப்படும். பின்னர் மாகாண சபை தேர்தல் நடத்தப்படும். தந்தை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தால் மகன் மாகாண சபை உறுப்பினராக இருப்பார். இதுதான் இலங்கையின் அரசியல் வரலாறு. இந்த நிலைமை மாற வேண்டும்.

புதிய தலைமுறையினர் உள்ளூராட்சிமன்றங்களுக்கும், மாகாண சபைகளுக்கும், நாடாளுமன்றத்துக்கும் தெரிவாக வேண்டும். அந்த நிலையை உருவாக்குவோம்.

நாட்டை தூய்மைப்படுத்த எண்ணும் அரச ஊழியர்களால் அரச நிறுவனங்களும், திணைக்களங்களும் நிரப்பப்பட வேண்டும். உண்மையாக நாட்டை நேசிப்பவர்களிடம் இந்த நாட்டின் அரசியல் அதிகாரம் மாற்றப்பட வேண்டும்.” எனவும் சுட்டிக்காட்டினார்.

CATEGORIES
Share This