இம்ரான் கானை விடுதலை செய்யுங்கள் ; இந்தியா-பாக். போட்டியின் போது பறந்த விமானம்

இம்ரான் கானை விடுதலை செய்யுங்கள் ; இந்தியா-பாக். போட்டியின் போது பறந்த விமானம்

டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. மழை காரணமாக இந்த போட்டியில் தாமதம் மற்றும் இடையூறு ஏற்பட்ட நிலையில், போட்டியின் போது நடைபெற்ற சம்பவத்தின் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவின்படி, சிறிய ரக விமானம் ஒன்றில் “இம்ரான் கானை விடுதலை செய்” என்ற வாசகம் அடங்கிய கொடி கட்டப்பட்டு இருந்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. போட்டியின் போது இந்த விமானத்தை யார் இயக்கினார்கள், இதன் பின்னணியில் இருப்பது யார் என்பது தொடர்பாக இதுவரை எந்த தகவலும் இல்லை.


இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி அமெரிக்காவின் நியூ யார்க்கில் உள்ள நசௌ கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் நடத்துகின்றன.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சிறையில் உள்ளார்.

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 119 ரன்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்தது . இதைத் தொடர்ந்து 120 ரன்களை இலக்காக துரத்திய பாகிஸ்தான் அணி கடைசி ஓவர் வரை போராடி தோல்வியை தழுவியது. இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

CATEGORIES
Share This