பிரபல தொழிலதிபருடன் புதிய கூட்டணி அமைக்கும் விமல்?; அடுத்த வாரம் கொழும்பில் விசேட சந்திப்பு

பிரபல தொழிலதிபருடன் புதிய கூட்டணி அமைக்கும் விமல்?; அடுத்த வாரம் கொழும்பில் விசேட சந்திப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவங்ச, ரொஷான் ரணசிங்க மற்றும் தொழிலதிபர் திலித் ஜயவீர ஆகியோர் புதிய அரசியல் கூட்டணியை ஆரம்பிப்பது தொடர்பில் ஆரம்பக்கட்ட கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பு அரசியல் தகவல்களை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டணியில் வடமாகாணத்தை பிரதிநிதித்துப்படுத்தும் குழு ஒன்றும் இணையவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோரையும் இணைத்துக்கொள்வது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து சுயேட்சையாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவையும் இந்தக் கூட்டணியில் இணைத்துக் கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

உத்தர லங்கா கூட்டணியில் அங்கம் வகிக்கும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, விஜயதரணி தேசிய பேரவை, பிவித்துரு ஹெல உறுமய ஆகிய கட்சிகள் இந்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரைத் தெரிவு செய்வது தொடர்பில் இந்தக் கூட்டணி இன்னும் முடிவெடுக்கவில்லை என கூட்டமைப்பின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டமைப்பைக் கட்டியெழுப்புவது தொடர்பான விசேட கலந்துரையாடல் அடுத்த வாரம் கொழும்பில் நடைபெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
Share This