ஜனாதிபதி ரணில் அரசியலமைப்பை மீறியுள்ளார் – கிளிநொச்சியில் வைத்து நேரடியாகவே குற்றம் சாட்டினார் சுமந்திரன்

ஜனாதிபதி ரணில் அரசியலமைப்பை மீறியுள்ளார் – கிளிநொச்சியில் வைத்து நேரடியாகவே குற்றம் சாட்டினார் சுமந்திரன்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுமக்களுக்கு காணிகளை கையளித்து அதன் முழு உரித்தையும் அவர்களுக்கு வழங்குவது வரவேற்கப்பட வேண்டிய விடயமாக இருந்தாலும் அவர் அரசியலமைப்பை மீறி காணி அதிகாரத்தினைப் பயன்படுத்தியுள்ளார் என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று சனிக்கிழமை   ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நீண்டகாலமாக காணி உரிமை இல்லாமல் இருந்த மக்களுக்கு அந்த காணி உரிமைகளை மக்களுக்கே வழங்கப்படுகிறது. இந்தப் பணிகளை முன்னெடுத்த ஜனாதிபதிக்கும் ஏனைய அதிகாரிகளுக்கும் எமது மக்கள் சார்பாக எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த காணி உரிமை உங்களுக்கு கொடுக்கும்போது. எவ்வித கட்டுப்பாடுகள் இன்றி, உங்களுக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்படுகிறது. இதுவரை இவ்வாறு நிகழவில்லை. இதில் ஒரு ஆபத்தும் இருக்கிறது. இந்தக் காணிக்கான முழு அதிகாரம் உங்களுக்கு கிடைக்கும்போது, அதனை இழக்க நேரிடலாம். அதனை நீங்கள் விற்கக்கூடும். பல்தேசிய கம்பனிகள் வந்து இந்தக் காணிகளை வாங்கக் கூடும்.

நாட்டுப் பற்றுள்ள, மண் பற்றுள்ள நீங்கள், உங்கள் காணிகளைப் பாதுகாத்துக் கொள்வதில் அவதானமாக இருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்தக் காணி உரிமையைப் போன்று அதிகாரப் பகிர்வு குறித்தும் குறிப்பிட வேண்டும். அதிகாரப் பகிர்வு என்று கோரிக்கை நீண்டகாலமாக மக்களின் அரசியல் அபிலாசையாக இருக்கிறது. 1987ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்புத் திருத்தத்தில் காணிரூபவ் பொலிஸ் அதிகாரம் மாகாண சபைக்கு கொடுக்கப்பட்டது. அரசியலமைப்பில் இருந்தும் அமுல்படுத்தப்படவில்லை. காணி அதிகாரம் முழுமையாக மாகாண சபைகளின் ஊடாக அமுல்படுத்தப்பட வேண்டும்.

அரச காணிகளைக் கொடுக்கப் போதும் மாகாண சபைகளில் இருந்து வரும் கோரிக்கைகளுக்கு அமையே வழங்கப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றத் தீர்ப்பொன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், பின்னர் நீதிமன்றத்தின் மற்றுமொரு தீர்ப்பில், கொடுக்கப்பட்ட அதிகாரம் பறித்தெடுக்கப்பட்டு மத்திய அரசாங்கத்திடம் கொடுக்கப்பட்டது. இன்று ஜனாதிபதி கிளிநொச்சி மாவட்டத்திற்கு வந்துள்ளார். அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி தொடர்ந்து கூறி வருகிறார். அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு காண முன்னெடுக்கும் முயற்சிகளுக்கும்காணி அதிகாரம் கொடுக்கும் இந்த உறுதி வழங்கும் இந்த முயற்சிக்கும் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கிறோம். அதேவேளை மாகாணத்திற்கு உள்ள காணி அதிகாரத்தையும் முழுமையாக வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட சிறந்த மகளிர் சுகாதார நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்றிருந்த சுமந்திரன் எம்.பி அங்கு கருத்து வெளியிடும்போது மாகாண சபைகளின் அதிகாரங்களை மீளப் பெறும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

யாழ்.போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக பிரகடனப்படுத்தப்போவதாக ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். அதேநேரம், மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளை, பாடசாலைகளை தேசிய கருத்திட்டத்துடன் இணைப்பதாக கூறி நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது மாகாண சபைகளின் கீழேயே சுகாதாரம், கல்வி ஆகியவற்றுக்கான அதிகாரங்கள் காணப்படுகின்றன. அவ்வாறிருக்கையில் ஒருகையால் வழங்குவது போன்று செயற்பட்டுவிட்டு மறுபக்கத்தில் அவற்றை மீளப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளை எடுக்க் கூடாது” என்றார்.

CATEGORIES
Share This