ஜனாதிபதி தேர்தலுக்குப் பின் உடனடியாக நாடாளுமன்றத் தேர்தல்: வேட்புமனுக்கள் கோரப்படும்

ஜனாதிபதி தேர்தலுக்குப் பின் உடனடியாக நாடாளுமன்றத் தேர்தல்: வேட்புமனுக்கள் கோரப்படும்

ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் உடனடியாக ஒரு பொதுத் தேர்தல் நடைபெறும் என டெய்லி மிரர் ஆங்கிலப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாகவோ அல்லது இரு தேர்தல்களையும் ஒரே சமயத்தில் நாடாத்துவதற்கோ ஜனாதிபதி இணக்கம் காண்பிக்கவில்லை.

ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தல் நடாத்தப்படும் என அவர் அமைச்சரவையில் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றதன் பின்னர் உடனடியாக பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட வேண்டும்.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறும் வேட்பாளர் அவரது கட்சி அல்லது கூட்டணிக்கு பெரும்பான்மையுடன் புதிய நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுப்பார்.

இறுதியாக 2020 ஆண்டு ஓகஸ்ட் மாதம் பொதுத் தேர்தல் நடாத்தப்பட்டது. மேலும் ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகளும் காணப்படுகின்றன.

அரசியலமைப்பின் பிரகாரம் அறிவிக்கப்பட்ட எந்தவொரு தேர்தலையும் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் கடமைப்பட்டுள்ளது.

2024ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் திகதிக்கும் ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதிக்கும் இடைப்பட்ட ஒரு நாளில் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த காலப்பகுதிக்குள் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு வேட்புமனுக்கள் கோரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் பதிவேடு உருவாக்கம் உள்ளிட்ட அத்தியாவசிய நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக ஏற்பாடுகள் மற்றும் தயார்படுத்தல்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This