நாடாளுமன்றம் கலைக்கப்படுமா முதலில் எந்த தேர்தல்?; அரசியல் அரங்கில் மீண்டும் குழப்பம்

நாடாளுமன்றம் கலைக்கப்படுமா முதலில் எந்த தேர்தல்?; அரசியல் அரங்கில் மீண்டும் குழப்பம்

முதலில் நாடாளுமன்றத் தேர்தலை நடாத்துவதற்கு பசில் ராஜபச்க தலைமையிலான பொதுஜன பெரமுன பாரிய முயற்சியை முன்னெடுத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தனாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று திங்கட்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் “முதலில் நாடாளுமன்றத் தேர்தல் நடாத்தப்படும் என்ற கருத்துக்கள் அரசாங்கத்தின் நலன் கருதியே இடம்பெறுகின்றன.இந்த கருத்துக்கள் மொட்டுக் கட்சியின் தேவை கருதி முன்வைக்கப்படுகின்றன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பசில் ராஜபக்சவுக்கும் பல சுற்று பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பில் பல விடயங்கள் தற்போது வெளிவந்துள்ளன.

முதலில் நாடாளுமன்ற தேர்தலை நடாத்தி சில நாடாளுமன்ற உறுப்பினர்களையேனும் பாதுகாக்கவே அவர்கள் முயற்சிக்கின்றனர்” என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தல் நடாத்தப்படுமாயின் நிலையற்ற அரசாங்கமே தோற்றம் பெறும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில் தெரிவித்துள்ளார்.

“கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஏற்பட்ட நிலைமையே இம்முறை பொதுஜன பெரமுனவிற்கும் ஏற்படும்.

அதனை தடுப்பதற்காகவே ஐனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தல் நாடாத்தப்பட வேண்டும் என வலியுறுத்துகிறார்கள்” எனவும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 19ஆம் திகதிக்கு முன்னர் நடாத்தப்பட வேண்டும்.

இலங்கை அரசியலமைப்பு மற்றும் 1981 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தல்கள் சட்டத்தின் இலக்கம் 5 இன் படி குறிப்பிட்ட கால எல்லைக்குள் ஜனாதிபதித் தேர்தலை நடாத்தும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுக்கு உட்பட்டது.

அதன் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் 2024 செப்டெம்பர் 17ஆம் திகதிக்கும் ஒக்ரோபர் 16 ஆம் திகதிக்கு இடையில் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

என்றாலும், நாடாளுமன்றத்தை கலைப்பதன் ஊடாக பொதுத் தேர்தலை நடாத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது. பொதுஜன பெரமுனவும் முதலில் பொதுத் தேர்தல் என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளது.

இதேவேளை,மாகாண சபைத் தேர்தலுக்கு திகதி குறித்த பின்னரும் தேர்தல் நடைபெறவில்லை. இதுபோன்ற நிலைதான் ஜனாதிபதித் தேர்தலுக்குத் திகதிகள் அறிவிக்கப்பட்ட பின்னரும் தேர்தல் நடைபெறாமல் போகலாம் என்று பலரும் கருதும் நிலை உருவாகியுள்ளது.

இலங்கைத் தீவில் முதலில் ஜனாதிபதித் தேர்தலா அல்லது நாடாளுமன்ற தேர்தலா என்பது மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது.

CATEGORIES
Share This