சிரமத்தில் சித்த மருத்துவ மாணவர்கள்: அரசாங்கம் காரணமா?

சிரமத்தில் சித்த மருத்துவ மாணவர்கள்: அரசாங்கம் காரணமா?

இலங்கை முழுவதும் 359 சித்தமருத்துவ மாணவர்கள் உள்ளக பயிற்சிக்காக காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாக உள்ளக பயிற்சிக்கு எதிர்பார்க்கும் சித்த மருத்துவ மாணவ குழுவின் யாழ் பிரதிநிதி வர்ணகுலசிங்கம் பிரவீன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

ஆயுர்வேதத் திணைக்களத்தின் குளறுபடியான சில நடவடிக்கைகள் மூலம் நாம் பாதிக்கப்பட்டுள்ளோம்.

இதனால் எமது உள்ளகபயிற்சி தடைபட்டுள்ளது. அவர்களுடன் எங்களுடைய பிரச்சனை தொடர்பில் கூறியுள்ள போதிலும் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு 60 பேருக்கு மாத்திரம் அனுமதி வழங்கியிருப்பதாக தெரிவித்தனர்.

உள்ளக பயிற்சி என்பது அனைத்து மாணவர்களுக்குமான உரிமை. 60 மாணவர்களுக்கு மாத்திரம் எவ்வாறு அனுமதியினை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு வழங்க முடியும்.

அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடு காரணமாகவே இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும் இது அரசாங்கத்தின் தவறேயின்றி மாணவர்களுடைய தவறல்ல.

இதற்குக் காரணம் ஆயுர்வேத திணைக்களம் உள்ளிட்ட ஏனைய திணைக்களங்கள். இவர்களுடைய இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் நமது கற்க நெறியை பூரணமாக நிறைவு செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

தற்பொழுது 30 வயதினை எட்டியுள்ள போதிலும் நீண்ட காலமாக உள்ளகப் பயிற்சியினை நிறைவு செய்யாததால் எமது கற்கை பூரணப்படுத்தப்படவில்லை.

உள்ளக பயிற்சி நிறைவு செய்யப்பட்டால் மாத்திரமே ஆயுர்வேத சங்கத்தில் எங்களை ஒரு வைத்தியராக பதிவு செய்ய முடியும்” என ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

CATEGORIES
Share This