ருமேனியாவில் தொழில் பெற்றுத்தருவதாக மோசடி செய்த நபர் கைது

ருமேனியாவில் தொழில் பெற்றுத்தருவதாக மோசடி செய்த நபர் கைது

ருமேனியாவில் தொழில் பெற்றுத்தருவதாக தெரிவித்து ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பணத்தை மோசடி செய்த நபர் ஒருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை பிரிவு அதிகாரிகளினால் இன்று வெள்ளிக்கிழமை (3) கைது செய்யப்பட்டுள்ளார்.

ருமேனியாவில் தொழில் பெற்றுக் கொள்வதற்காக குறித்த சந்தேக நபருக்கு பணம் வழங்கி, வாக்குறுதி அளிக்கப்பட்ட பிரகாரம் தொழில் பெற்றுத் தரவில்லை என இளைஞர்கள் இருவர் பணியகத்துக்கு முறைப்பாடு செய்துள்ளதுடன் மேலும் சில நபர்களிடம் பணம் பெற்றுக் கொள்வதற்காக சந்தேக நபர் பத்தரமுல்லை தியத்த உயன பகுதிக்கு வர இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய உடனடியாக செயற்பட்ட விசாரணை அதிகாரிகளால் பத்தரமுல்லை தியத்த உயன அருகாமையில் இருந்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ருமேனியால் தொழில் பெற்றுத்தருவதாக தெரிவித்து நாட்டில் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர்களிடமிருந்து குறித்த சந்தேக நபர் 3 இலட்சம் முதல் 7 இலட்சம் ரூபா வரை பெற்றுள்ளார். அதன் பிரகாரம் சந்தேக நபர் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பணம் மோசடி செய்துள்ளமை வெளிப்பட்டுள்ளது.

சந்தேக நபர் வெலிமடை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதுடன் கொழும்பில் தங்கி இருந்து இந்த மோசடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

இதற்கு முன்னர் குறித்த சந்தேக நபர் ருமேனியாவில் சேவை செய்த நபர் என மேலதிக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இந்த மோசடி வியாபாரத்துக்கு சந்தேக நபருக்கு உதவியாக இருந்த மேலுமொரு நபர் இனம் காணப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் தினங்களில் அவரும் கைதுசெய்யட இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நாளை சனிக்கிழமை (4) மாளிகாவத்தை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட இருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This