முல்லைத்தீவில் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் வழக்கு பதிவு; களவிஜயம் மேற்கொண்ட ரவிகரன்

முல்லைத்தீவில் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் வழக்கு பதிவு; களவிஜயம் மேற்கொண்ட ரவிகரன்

கரியல்வயல் சுண்டிக்குளம் பகுதிகளை அண்மித்துள்ள 130 நபர்களுக்கு எதிராக வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் வழக்கு தாக்கல் செய்துள்ள இடங்களை முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஞாயிற்றுக்கிழமை (28) களவிஜயம் மேற்கொண்டு அவர்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார்.

1908ஆம் ஆண்டு தொடக்கம் மக்கள் பயிர் செய்து வாழ்ந்துவரும் நிலையில் குறித்த இடத்தில் உள்ள மக்கள் தம் காணிகளை துப்பரவு செய்தமையை அடுத்து வனஜீவராசிகள் திணைக்களத்தினர் அது தமக்குரிய காணி என முல்லைத்தீவு நீதிமன்றில் கடந்த வருடம் (07.12.2023) அன்றையதினம் தாக்கல் செய்திருந்தனர்.

சுண்டிக்குளம் தேசிய பூங்காவிற்குள் உட்சென்றமை , தாவரங்களை வெட்டி வெளியாக்கியமை , காணிகளை வெளியாக்கியமை, பாதைகளை அமைத்தல் மற்றும் பாதைகளை பயன்படுத்தியமை போன்ற காரணங்களை முன்வைத்து குறித்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

610 ஏக்கர் காணியில் குறித்த மக்கள் விவசாயம் மேற்கொண்டு வருகிறார்கள். அத்துடன் 370 ஏக்கர் விவசாய நிலங்களில் சிறியளவில் பற்றைகள் வளர்ந்துள்ளதனால்  பயிர்ச்செய்கை மேற்கொண்ட நிலங்களுக்கு அனுமதி வழங்கப்படாது உள்ளது. கிட்டத்தட்ட 1000 ஏக்கர் விவசாய நிலப்பரப்பில் 4 தலைமுறைக்கு மேற்பட்டு  விவசாய நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த வழக்கானது (07.12.2023) அன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் எடுத்து கொள்ளப்பட்டதன் பின்னர்  2024 ஆம் ஆண்டு மே மாதம் 2ம் திகதிக்கு அடுத்த வழக்கிற்கு தவணையிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This