தமிழ் பிரதேச அபிவிருத்திகுழு தவிசாளர் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கிறார்:ஜெயசிறில் பகிரங்கமாக கண்டனம்

தமிழ் பிரதேச அபிவிருத்திகுழு தவிசாளர் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கிறார்:ஜெயசிறில் பகிரங்கமாக கண்டனம்

( வி.ரி. சகாதேவராஜா)
அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேசங்களின் அபிவிருத்திகுழுத் தவிசாளர் முஷரப் எம்.பி. தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கிறார். பச்சைப் பாரபட்சம் காட்டுகிறார் என்று ஊடகச் சந்திப்பில் கருத்துரைத்த இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச தலைவரும் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் பகிரங்கமாக கண்டனம் தெரிவித்தார்.

குறித்த ஊடகச் சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை மாலை அவரது காரைதீவு அலுவலகத்தில் நடைபெற்றது.

அபிவிருத்தி குழு கூட்டம் என்ற போர்வையில் ரகசியக்கூட்டம் நடத்தியதாகவும் காரைதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மக்கள் வெளிப்படையாக அரசாங்கத்திற்கு வரி செலுத்துவதாகவும் குறித்த கூட்டத்தில் பொது அமைப்புகள் மற்றும் சிவில் சமூகங்கள் புறக்கணிக்கப்பட்டு அரச அலுவலக தலைவர்கள் மாத்திரம் பங்கெடுத்து காரைதீவுவாழ் மக்களுக்கு அநீதி இழைத்ததாகவும் முன்னாள் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் ஜெயசிறில் ,பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அபிவிருத்திக்குழு தலைவர் முஷாரப் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.

காரைதீவு பிரதேச செயலகத்தில் நடாத்தப்பட்ட அபிவிருத்தி குழு கூட்டம் தொடர்பாக அனைத்து மக்களுக்கும் தெளிவுபடுத்துவதற்காக ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார். இதன்போதே அவர் இக்கருத்தினை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்..

காரைதீவில் 65 வீதம் 12 கிராம சேவக பிரிவில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு 20 லட்சம் ரூபாயும்,35 வீதம் 5 கிராம சேவக பிரிவில் வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு 46 லட்ஷம் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் இருந்தே தெளிவாக விளங்குகின்றது காரைதீவு ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் தமிழ் மக்களுக்கு மிக அநியாயம் செய்துகொண்டிருக்கின்றார் என்பது .

இன்று நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூடடத்தில் தமிழ் தேசிய கூட்ட்டமைப்பின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் அவர்களுடைய பிரதிநிதியாக கலந்துகொண்டவன் என்ற அடிப்படையில் நேரடியாக ஏன் இவ்வாறு இன ரீதியாக பிரித்தாளுகின்ற தந்துரோபாயத்தையும் அரசியலுக்காகவும் எங்களுடைய தமிழர்களை அடக்குகின்றதும் அபிவிருத்தியில் புறக்கணிக்கின்ற செயற்படடையும் ஏன் முன்னெடுகின்றீர்கள் என நான் அந்த இடத்தில் கேள்வியாக எழுப்பியபோது, அவர் தான்தோன்றித்தனமாக அந்த பிரச்சினையை மூடி மறைத்து வேறு ஒரு திசைக்கு பதில் வழங்கியிருந்தார். உண்மையிலேயே கவலையளிக்கிறது .

இவ்வாறான செயற்பாடுகளை செய்கின்ற ஒருங்கிணைப்பு குழு தலைவர்களை தமிழர்கள் பிரதேசங்களில் நியமிக்க வேண்டாம் என அமைப்புகள் ,ஆலய தர்மகர்த்தாக்கள், பொது சிவில் அமைப்புக்கள் நிச்சயமாக இல்லாதொழிக்க வேண்டும் . இவர்கள் அரசியல் அஜந்தாக்களை அரங்கேற்றுவதற்காக அவர்களுடைய மக்களின் வாக்குகளை பெறுவதற்காக தமிழர்களை ஓரங்கட்டுகின்ற செயற்பாட்டை தொடர்ச்சியாக முன்னெடுத்துவருகின்றனர் .

உண்மையிலேயே பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து அவர் அந்த நிதியை ஒதுக்கியிருந்தால் நாங்கள் கேட்டிருக்கமாடடோம் .இது ஒரு பள்ளி நிருவாக பணமாகஇருந்தால் அல்லது அவருக்குரிய பன்முகப்படுத்தப்படட நிதியாக இருந்தால் நாங்கள் கேட்டிருக்கமாட்டோம்.

அவருக்கு ஒதுக்கப்பட்ட அந்த பத்து கோடி ரூபாயும் ஒருங்கிணைப்பு குழு தலைவர் என்ற அடிப்படையிலேயே வழங்கப்பட்டுள்ளது. அது சகலருக்கும் பொதுவானது. ஒரு இனத்திற்கு மட்டும் உரித்தானதல்ல.அந்த அடிப்படையிலேயேதான் எங்களுடைய மக்களுக்கு அபிவிருத்தி கிடைக்க வேண்டும் என்றுதான் கேட்கின்றோம். இந்த காரைதீவு மக்களும் வரி செலுத்துகின்றார்கள் . மாளிகைக்காடு, மாவடிப்பள்ளி மக்கள் மாத்திரம் வரி செலுத்தவில்லை நாங்கள் தெளிவாக அரசாங்கத்திற்கு வரி செலுத்துகின்றோம்.எனவே எங்களுக்கு இந்த அபிவிருத்தி கிடைக்கப்பெற்ற வேண்டும்.

ஆனால் அவர் அந்தக் கூட்டத்திலே கடந்த காலங்களில் நடைபெற்ற கூட்டங்கள் இல்லாமல் இம்முறை மீனவ சங்கங்கள் , அமைப்புக்கள்,விவசாய அமைப்புக்கள்,ஆலய தர்மகர்த்தாக்கள் ,சிவில் நிர்வாகங்களை அழைக்காது அரச திணைக்கள தலைவர்களை அழைத்து சாதாரணமாக இந்த கூட்டத்தை நடாத்தி சென்றுள்ளார்.

மக்களினுடைய பிரதிநிதிகள் ,பொது அமைப்புகள் மக்கள் நேரடியாக பங்குபெறுவதுதான் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டம் .இது அபிவிருத்தியான கூட்டமா இல்லை ஒரு ரகசிய கூட்டமா என்ற கேள்வியும் கேட்கின்ற கட்டாயத்தில் இருக்கின்றேன், குறிப்பாக ஒரு மக்களுக்கு அபிவிருத்தி என்பது மக்களின் வேண்டுதலையும் ஏற்று செயற்படுத்த வேண்டும்.

இன்று ஒரு சிலரை தவிர அங்கு பேசுவதற்கு கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. பாராளுமன்ற உறுப்பினரின் பிரதிநிதியாக சென்ற நான் எங்களுடைய மக்கள் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு தான்தோன்றித்தனமாக முறைகேடான பதிலுடன் இவ்வாறான கேள்விகள் வினவ கூடாது என சொல்லி சென்றுள்ளார்.

குறிப்பாக தமிழ் முஸ்லீம் முரண்பாடுகள் வருவதற்கு காரணம் இவ்வாறான அரசியல்வாதிகளினால் முஸ்லிம்களுக்கு கூடுதலாக ஒதுக்கியும் தமிழர்களுக்கு குறைவாக ஒதுக்குவதும் பிணக்குகள் வர காரணமாக இருக்கிறது. அந்த இடத்தில் நியாமான கேள்வியை கேட்டால் அவர்கள் எடுக்கும் ஆயுதம் இனவாதி என்பதாகும் .அந்த இடத்தில் தெட்டத்தெளிவாக அவருக்கு அந்த விடயத்தை சொல்லியிருந்தேன். இவ்வாறுதான் நாவிதன்வெளியிலும் ஒரு புறக்கணிப்பை செய்திருந்தார் .

கல்முனை வடக்கில் அபிவிருத்திக்குழு கூட்டத்தினை கூட்டவில்லை ஏலவே பொத்துவில்,அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று,இறக்காமம்,சம்மாந்துறை இவ்வாறான அப்பிரதேசங்களுக்கு முன்னாள் தவிசாளர்களையும் அழைத்து அபிவிருத்தி குழு கூட்டங்களை கூட்டிவிட்டார்.

இப்போது மூன்று மாதங்களுக்கு பின்னரே காரைதீவில் அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று கூட்டப்பட்டுள்ளது.அதே போன்று கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு இதுவரை கூட்டம் கூட்டவில்லை. அங்கால பக்கம் போகவுமில்லை. அமைச்சரவை அங்கீகரித்த பிரதேச செயலகம் என்ற அந்தஸ்தை பொய்யாக்கி அதுவொரு உப பிரதேச செயலகம் என்கிறார்.அப்படிப்பட்டவரிடம் எம்மவர்கள் மகஜர் கொடுத்து ஜால்ரா அடிக்கிறார்கள்.

இனிமேலாவது தமிழ் பிரதேச செயலகங்களுக்கு இவ்வாறு இன ரீதியாக இனவாதிகளாக செயற்படுகின்ற ஒருங்கிணைப்பு தலைவர்களை அரசாங்கம் அல்லது இந்த நாட்டினுடைய அமைச்சர்கள் தீர்மானிக்கின்ற நேரம் சிவில் அமைப்புகள் பொது அமைப்புகள் பெரும்பான்மையினரை தந்தால் நல்லது என கேட்கின்றனர் .மேலும் இந்த விடயத்தில் உன்னிப்பாக கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் . என்றார்.

CATEGORIES
Share This