கல்முனை என்பது தமிழர்களின் தாயகம்- கல்முனையில் கோடீஸ்வரன் எச்சரிக்கை!

கல்முனை என்பது தமிழர்களின் தாயகம்- கல்முனையில் கோடீஸ்வரன் எச்சரிக்கை!

( வி.ரி.சகாதேவராஜா)
கல்முனை என்பது தமிழர்களின் தாயகம்,தமிழர்களின் அடையாளம் அதனை யாரும் மறந்துவிட முடியாது .நீங்கள் மறக்கவும் கூடாது.

இவ்வாறு அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் நற்பிட்டிமுனையில் உரையாற்றும் போது குறிப்பிட்டார்.

கல்முனையில் எமது நிலத்தை இழந்தால் எமது அடையாளமே போய்விடும். யாருக்காகவும் அதனை விட்டுக்கொடுக்ககூடாது. பறிகொடுத்தால் அடையாளம் பறிபோய்விடும்.

நற்பிட்டிமுனை சூப்பர் ஸ்டார் விளையாட்டு கழகத்திற்கான சீருடை வெளியிட்டு நிகழ்வு நேற்று முன்தினம் விளையாட்டு கழகத் தலைவர் ஐ .கமல்ராஜ் தலைமையில் நடைபெற்ற போது மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார் .

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்

பிரதேச செயலகம் என்பது தமிழர்களின் அடிப்படை உரிமையாக இருக்கிறது.
எமது அடையாளத்தை பாதுகாப்பதில் இடம் முக்கியமானது.

எமக்கான அடையாளம் இருக்க வேண்டுமாக இருந்தால் எமது இடம் பறிபோகக் கூடாது இதை விட்டால் நாளை கல்முனைல் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்ற அடையாளமே இல்லாமல் போய்விடும்.

ஒரு 30 40 வருடங்களுக்கு முன் தள்ளிப் பார்ப்போமானால் பிரதேசம் எல்லாம்
தமிழர்களின் பிரதேசமாக இருந்தது. கல்முனை குடி என்று அன்று இருந்தது இன்று கல்முனையாக மாறி இருக்கின்றது. இவையெல்லாம் எமக்கெதிரான திட்டமிட்ட சூழ்ச்சிகள். சதி நடக்கிறது.

உண்மையில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக முதன் முதலாக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தவன் நான்தான் . ஐக்கிய நாடு சபையின் 51வது கூட்டத் தொடரிலே பிரச்சனையை முன்வைத்தவனும் நானே. இதை யாரும் மறுக்க முடியாது.

வெகு விரைவில் இது விடயம் தொடர்பாக ஜனாதிபதியோடும் பிரதமரோடும் நாங்கள் தொடர்பு பட்டு பேச இருக்கின்றோம்.

நிபந்தனையோடு எமது ஆதரவை வழங்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

எமது பிரதேச செயலகத்துக்கு என்னென்ன அதிகாரங்கள் இருக்க வேண்டுமோ அவற்றையெல்லாம் தர வேண்டும் என்று நாங்கள் நிபந்தனை விதிக்க இருக்கின்றோம்.

அது மாத்திரமல்ல ஏலவே ஆளணியின் படி கணக்காளர் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும் .ஆனால் அவர் வரவில்லை.திட்டமிட்ட சதி நடக்கின்றது. அதனால் அது இழுபடுகின்றது.

அந்த சூழ்ச்சிகளை எல்லாம் நாங்கள் ஒன்றாகி முறியடிக்க வேண்டும் .அதற்காக உங்களது ஒத்துழைப்பும் தேவை.
என்றார்.

சீருடை விநியோக நிகழ்வில் அக்கரைப்பற்று பிரபல தொழிலதிபர் குமார் ஜெகநாதன் மற்றும் ஊடகவியலாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

CATEGORIES
Share This