இலங்கை இராணுவச்சிப்பாய்கள் ரஷ்ய படைகளில் கூலிப்படையாக பணி!

இலங்கை இராணுவச்சிப்பாய்கள் ரஷ்ய படைகளில் கூலிப்படையாக பணி!

இலங்கை இராணுவச்சிப்பாய்கள் ரஷ்ய படைகளில் கூலிப்படைகளாக பணியாற்றிவருவதனை சர்வதேச ஊடகமொன்று அம்பலப்படுத்தியுள்ளது.

அதில் டொனொட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள ரஷ்ய படையினரின் பதுங்குழியொன்றின் மீது உக்ரைன் மேற்கொண்டதாக்குதலில் பலத்த காயமடைந்த சேனகபண்டார தனது நாட்டை சேர்ந்தவரான நிபுணசில்வாவை அந்த இடத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்ற முயன்றார்.

36 வயது சேனகவின் காலிலும் கையிலுமிருந்து குருதி வெளியேறிக்கொண்டிருந்தது.

நிபுணசில்வாவின் நிலைமை அதனை விட மோசமானதாக காணப்பட்டது அவரது நெஞ்சில் காயம் எற்பட்டிருந்தது கையிலும் காலிலும் காயங்கள் காணப்பட்டன என சேனக தெரிவித்தார்.

கடும் தாக்குதல் காரணமாக அந்த இடத்திலிருந்து இரண்டு இலங்கையர்களும் பின்வாங்கியதும் ரஷ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள பதுங்குகுழிகளை உக்ரைனின் ஆளில்லா விமானங்கள் தாக்கின.

இலங்கையர்கள் இருவரும் ரஷ்ய இராணுவத்துடன் இணைந்து யுத்ததில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

உக்ரைனின் ஆளில்லா விமானங்கள் உக்கிரமான தாக்குதலில் ஈடுபட்டதால் நிபுணவை கைவிட்டுவிட்டு தான் தப்புவதை தவிர வேறு வழியிருக்கவில்லை என தெரிவித்தார் சேனக.

நிபுணவை நான் தூக்கிக்கொண்டுவரும்போது இறுதி பதுங்குகுழி மீது மீண்டும் உக்ரைனின் ஆளில்லா விமானதாக்குதல் இடம்பெற்றது நிபுண நிலத்தில் வீழ்ந்தார் என சேனகதெரிவித்தார்.

சேனக கிழக்கு உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க்மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும்வேளையில் அவர் இதனை தெரிவித்தார்.

இது இவ்வளவு ஆபத்தானதாக காணப்படும் என நாங்கள் நினைக்கவில்லை எனஅவர் அல்ஜசீராவிற்கு தெரிவித்தார்.வட்ஸ்அப் மூலம் அனுப்பிய குரல்செய்திகளில் அவர் இதனை குறிப்பிட்டார்.

டொனெட்ஸ்க்கில் தங்களை பதுங்குழிகளில் கடமையில் ஈடுபடுமாறு ரஷ்ய அதிகாரிகள் கேட்டுக்கொண்டார்கள் என அவர் தெரிவித்தார்.

ஆனால் தாக்குதல் ஒன்று இடம்பெறுகின்றது என்பது எங்களிற்கு தெரியாது என தெரிவித்தஅவர் தானும் தனது நண்பரும் ரஷ்யாவின் துணைப்படையில் இணைந்து, இரண்டு மாத பயிற்சிகளை பெற்று அதன் பின்னர் முன்னரங்கிற்கு அனுப்பப்பட்டோம் என்பதையும் விபரித்தார்.

நிபுணவின் உடலை பின்னர் ஏனைய இலங்கை வீரர்கள் மீட்டனர்.

நம்பிக்கையற்ற போர்க்களமாக காணப்படும் டொனெட்ஸ்கில் உயிரிழந்த இரண்டாவது இலங்கையர் இவர் என்கின்றார் சேனக.

உக்ரைனிற்கு எதிரான போரில் ரஷ்ய இராணுவத்துடன் இணைந்து நூற்றுக்கணக்கான இலங்கையர்கள் போரிடுகின்றனர்.மாதாந்தம் 3000 அமெரிக்க டொலர்கள் என்ற ரஷ்யாவின் அறிவிப்பினால் இவர்கள் யுத்தத்தில் ஈடுபடுவதற்காக சென்றுள்ளனர் மேலும் ரஷ்ய பிரஜாவுரிமைக்கான வாய்ப்பும் இலங்கையர்களை ரஷ்ய போர்க்களங்களை நோக்கிசெல்லத் தூண்டியுள்ளது.ரஷ்யாவில் வசிக்கும் இலங்கையர்கள் இதனை தெரிவித்தனர்.

இதேவேளை மேலும் பலர் ரஷ்ய இராணுவத்துடன் இணைந்து செயற்படுவதற்காக காத்திருக்கின்றனர் – இவர்களில் பலர் முன்னாள் இராணுவத்தினர்.

ரஷ்யாவின் பணத்திற்காகவும் இலங்கையின் மிகமோசமான வறுமையிலிருந்து தப்புவதற்காகவும் உக்ரைன் படையினரின் கரங்களில்மரணத்தை தழுவும் ஆபத்தையும் எதிர்கொள்ள இவர்கள் தயாராகவுள்ளனர்.

உக்ரைன் யுத்தத்தில் ஈடுபடவேண்டாம் என நான் அவரிடம் மன்றாடினேன்

இலங்கையின் தென்பகுதியை சேர்ந்த 27 வயது நிபுணசில்வா தனது இளம் குடும்பத்தை விட்டுவிட்டு உக்ரைனில் ரஷ்யாவிற்காக போரிட்டு மடிந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் பொருளாதார வீழ்ச்சி மற்றும் அரசியல் எழுச்சி ஆகியவை கடந்த 2022 இல் நாட்டின் 22 மில்லியன் மக்கள் பசியில் சிக்கும் நிலையை ஏற்படுத்தியது.

கட்டுப்படுத்த முடியாத பணவீக்கமும் மீளசெலுத்தமுடியாத வெளிநாட்டு கடனும் பல மாத ஆர்ப்பாட்டங்களிற்கு மத்தியில் எரிபொருள் உணவு மருந்திற்கு பெரும் தட்டுப்பாட்டை ஏற்படுத்தின

இந்த ஆர்ப்பாட்டங்கள் நாட்டின் நிதியை மிகமோசமாக நிர்வகித்தார் என்ற குற்றம்சாட்டப்பட்ட அரசாங்கத்தின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை இறுதியில் ஆட்சியிலிருந்து அகற்றின.

இலங்கை இராணுவத்தில் ஒன்பது வருடங்கள் பணிபுரிந்த நிபுண வறுமை காரணமாக ரஷ்ய இராணுவத்திற்கு விசுவாசமாக செயற்படவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

தனது தந்தையின் மரணத்தின் பின்னர் விதவையான தாயையும் சகோதரியையும் பராமரிக்க வேண்டிய நிலையேற்பட்டதால் தனது சிறிய குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலைக்கு நிபுண தள்ளப்பட்டார் என அவரின் மனைவி வசந்தி அல்ஜசீராவிற்கு தெரிவித்தார்.

தனது குடும்பத்திற்கு வீட்டை கட்டுவதற்காக நிபுண 1.9 மில்லியன் கடன் வாங்கினார் எனினும் அவர் அந்த கடனை திரும்பி செலுத்த முடியாத நிலையில் காணப்பட்டார். நாளாந்த செலவுகளையும் சமாளிக்கவேண்டியிருந்தது.

இராணுவத்தில் பணிபுரிந்தமைக்காக அவருக்கு கிடைத்த மாதாந்த சம்பளம் 28000 ரூபாய்.

இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற அவர் சிங்கப்பூரில் வேலைபார்ப்பதற்காக வேலைவாய்ப்பு முகவர் நிலையமொன்றை அணுகினார்.அவரிடமிருந்து அவர்கள் 250,000 ரூபாயை பெற்றுக்கொண்டனர் ஆனால் வேலைவாய்ப்பை வழங்கவில்லை.

பின்னர் அந்த பணத்தில் அரைவாசியை பெற்றுக்கொண்ட அவர் மற்றுமொரு முகவர் நிலையத்தை தொடர்புகொண்டார்.அவர்கள் நிபுணவிற்கு ரஷ்யாவில் வேலைவாய்ப்பை பெற்றுத்தர முன்வந்தனர்.

சிறந்த வருமானம் கிடைக்கும் என்ற வாக்குறுதிகாரணமாக ரஷ்யாவிற்கு செல்வதற்காக அவர் மேலும் கடனாளியானார் என அவரின் மனைவிதெரிவித்தார். ரஷ்யாவில் வேலையை பெற்றுக்கொள்வதற்காக மற்றுமொரு வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிலையத்திற்கு வழங்குவதற்காகவும் பயணச்செலவுகளிற்காகவும் அவர் 1.2 மில்லியன் ரூபாய் கடன் பெற்றார்.

கடந்த வருடம் ஜூன்மாதம் இரண்டாம் திகதி ரஷ்யா சென்றடைந்த அவர் தொலைதூர கிராமமொன்றில் உள்ள பண்ணையில் தொழில்புரிந்தார்.அங்கு 14 நாட்கள் உரிய உணவு இன்றிதொழில் புரிந்தார்.அவருக்கு 160,000 ரூபாய் ஊதியம் வழங்கப்பட்டது.

எனினும் திருப்தியடையாத அவர் அங்கிருந்து விலகி மொஸ்கோவில் உள்ள உணவகமொன்றில் பணிபுரிந்தார்.அங்கு அவருக்கு 150,000ரூபாய் ஊதியம் வழங்கப்பட்டது.

பண்ணையை விட உணவகத்தில் நிலைமை சிறந்ததாக காணப்பட்டது ஆனால் நிபுண கடனை விரைவில் அடைக்கவேண்டும் என்ற சிந்தனையுடன் காணப்பட்டார்.

மொஸ்கோவில் பணியாற்றிய வேளை ரஷ்ய இராணுவத்தில் இணைவதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைத்தது என்கின்றார் மனைவி வசந்தி.

நான் இராணுவத்தில் இணையவேண்டாம் என மன்றாடிக்கேட்டேன் ஆனால் அது பாதுகாப்பான விடயம் அச்சப்படதேவையில்லை என்னைமுன்னரங்கில் போர் கடமையில் ஈடுபடுத்தமாட்டார்கள் என அவர் தெரிவித்தார் என்கின்றார் நிபுணவின் மனைவி.

நிபுணவிடமிருந்து கிடைக்கும் வருமானத்தை தான்நாங்கள் நம்பியிருந்தோம் அது இல்லாமல் நாங்கள் சாப்பிடக்கூட முடியாத நிலை காணப்பட்டது என்கின்றார் வசந்தி.

நாங்கள் ஆடைகளையோ பிள்ளைக்கு விளையாட்டுப்பொருட்களையோ வாங்குவதில்லை என அவர் தெரிவிக்கின்றார்.

எங்களுக்கு வேறுவழியில்லாததால்தான் அவர் ரஷ்ய இராணுவத்தில் இணைய தீர்மானித்தார் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

உக்ரைனில் ரஷ்ய இராணுவத்துடன் இணைந்து போர் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான அனுமதி ஜனவரியில் கிடைத்ததும் நாளாந்தம் அவர் தனது குடும்பத்தவர்களை தொலைபேசியில் தொடர்புகொள்வார்.

எனினும் பெப்ரவரி 21ஆம் திகதி அந்த தொலைபேசி அழைப்பு திடீரென நின்றுவிட்டது.

இதற்கு இரண்டு நாட்களிற்கு முன்னர்தான் உக்ரைனில் ஒருவருடகாலம் போரிடுவதற்கான ஒப்பந்தத்தில் நிபுண கைச்சாத்திட்டமைக்காக ரஷ்ய இராணுவம் 1640 டொலர்களை அவரின் மனைவிக்கு அனுப்பியிருந்தது.

சில நாட்கள் மௌனத்தின் பின்னர் தொலைபேசி மீண்டும் இயங்கியது – நிபுணவின் நண்பர் சேனக தொடர்புகொண்டார் காயங்கள் காரணமாக நிபுண இறந்துவிட்டார் என்றார் என வசந்தி தெரிவித்தார்.

நினைவுகள் அவரை இன்னமும் தேம்பி அழவைக்கின்றன.

எங்கு போவது என்ன செய்வது என எனக்கு தெரியவில்லை என்கின்றார் அவர்.

எனது மகன் தொலைபேசி எப்போதும் எடுத்து தந்தையின் அழைப்பிற்காக காத்திருக்கின்றான் என அவர்தெரிவிக்கின்றார்.

CATEGORIES
TAGS
Share This