சிவாஜிலிங்கத்துக்கு எதிரான பயங்கரவாத தடைச்சட்ட வழக்கு ; கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரிப்பு!

சிவாஜிலிங்கத்துக்கு எதிரான பயங்கரவாத தடைச்சட்ட வழக்கு ; கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரிப்பு!

சிவாஜிலிங்கத்துக்கு எதிரான பயங்கரவாத தடைச்சட்ட வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதோடு அவ்வழக்கினை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு மன்றுக்கு நியாயாதிக்கம் கிடையாதென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2020 வருடம் செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி இலங்கை அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் அங்கத்தவரான திலீபன் எனப்படும் ராசையா பார்த்தீபன் என்பவரின் 33ஆம் நினைவு தினத்தை நினைவுகூருமுகமாக கோண்டாவிலைச் சேர்ந்த கோகுல வீதியில் சிவாஜிலிங்கம் நினைவு தீபத்தை ஏற்றி நினைவுகூர்ந்தார்.

அதனூடாக அவர், இனங்களுக்கிடையே முரண்பாட்டை தோற்றுவிக்க முயற்சித்ததாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் 27ஆம் பிரிவின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்ட 29.08.2011ஆம் திகதி 1721/2 என்ற வர்த்தமானியின் கீழ் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகளின் 3(ஊ) பிரிவின் கீழ் குற்றம் ஒன்றை புரிந்ததன் விளைவாக, அவ்வொழுங்கு விதிகளின் நான்காம் பிரிவின் கீழ் தண்டிக்கப்படக்கூடிய குற்றமொன்றை செய்ததாக ம.க.சிவாஜிலிங்கத்தின் மீது மேல் மாகாணத்தின் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

கடந்த பெப்ரவரி 5ஆம் திகதி இவ்வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருக்கும் குற்றப்பத்திரிகை சட்ட விரோதமானது எனவும் இவ்வழக்கினை விசாரிப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு நியாயாதிக்கம் இல்லை எனவும் பூர்வாங்க ஆட்சேபனை குற்றம் சாட்டப்பட்டவரின் சார்பில் நீதிமன்றத்தின் முன்னிலையாகிய சட்டத்தரணிகளால் வாதம் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை அரசியல் யாப்பின் 154 P (3) பிரிவின் பிரகாரம், குற்றங்கள் நடந்ததாக கூறப்படும் பிரதேச எல்லைக்குள் நியாயாதிக்கம் கொண்ட மாகாண நீதிமன்றம் மட்டுமே மேற்குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் என்ற ஏற்பாடுகள் சுட்டிக்காட்டப்பட்டன.

எனவே, குற்றம் புரியப்பட்டதாக கூறப்படும் நியாயாதிக்க எல்லைக்குள் அமைந்திருக்காத கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இவ்வழக்கினை தாக்கல் செய்வதற்கும் விசாரணை செய்வதற்கும் சட்ட ஏற்பாடுகள் அமைவாக இல்லை என்றும் சட்டத்தரணியினால் சமர்ப்பணம் மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான வழக்குகள் நியாயாதிக்கம் எவ்வாறு இருப்பினும் மேல் மாகாண மேல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்யமுடியும் என்ற வகையில் அமைந்துள்ள 27ஆம் பிரிவின் கீழ் பாதுகாப்பு அமைச்சரினால் பிரகடனப்படுத்தப்பட்ட ஒழுங்குவிதிகள் செல்லுபடியற்றன என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது. ஏனென்றால், வியாக்கியானங்கள் சட்டத்தின் 17(1) (சி)இன் பிரகாரம், எச்சட்டத்தின் கீழும் மேற்கொள்ளப்படும் ஒழுங்குவிதிகள் மூலச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு முரண்பாடாக அமையக்கூடாது என்று விதந்துரைக்கப்பட்டிருக்கிறது.

எனினும், இவ்வழக்கில் குறிப்பிடப்பட்ட ஒழுங்கு விதிகள் மூலச்சட்டமான பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு முரண்பாடாக மேல் மாகாண மேல் நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்யும் அதிகாரத்தினை சட்டவிரோதமாக சட்டமா அதிபருக்கு கொடுத்திருக்கிறது.

எனவே குறித்த ஒழுங்குவிதிகள் சட்டவலு அற்றவை என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது.

அத்துடன் இவ்வுலகை நீற்றுச்சென்ற சக மனிதர்களின் அல்லது உறவினர்களின் நினைவு தினத்தை அனுஷ்டிப்பதை எந்த சட்டமும் தடைசெய்யலாகாது என்றும் இது தனிமனித சுதந்திரத்தையும் கலாசார மரபுகளையும் சமய மற்றும் பண்பாட்டு மரபுகளையும் சிதைக்கும் ஒரு செயல்.

மேலும் 33 வருடங்களுக்கு முன் மரணித்த அகிம்சை வழிப் போராளிகளை நினைவுகூரும் ஒரு செயல் எவ்வாறு பயங்கரவாத செயலாக அமையும்? அது எவ்வாறு இனங்களுக்கிடையே முரண்பாட்டினை தோற்றுவிக்கக்கூடும் என்கிற வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில் குறித்த வழக்கு நீதிமன்றத்தின் கட்டளைக்காக நேற்றைய தினம் நியமிக்கப்பட்டிருந்தது.

இத்தீர்ப்பின் பகுதிகளை வாசித்த மேல் நீதிமன்ற நீதிபதி இலங்கை அரசியல் யாப்பின் சட்ட ஏற்பாடுகளுக்கும் மற்றும் குற்றவியல் சட்டங்களுக்கும் அத்துடன் மாகாணங்களின் மேல் நீதிமன்ற விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழும் குறித்த நியாயாதிக்கம் குற்றங்கள் இழைக்கப்பட்டதாக கூறப்படும் மாகாணத்தின் மேல் நீதிமன்றத்துக்குத்தான் நியாயாதிக்கம் உள்ளது என்று வியாக்கியானம் செய்யப்பட்டது.

எனவே, இவ்வழக்கினை விசாரிப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு நியாயாதிக்கம் இல்லை என்று குறிப்பிட்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி, மேற்குறித்த வழக்கினை நியாயாதிக்கம் உள்ள ஒரு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபருக்கு அறிவுறுத்தினார்.

அத்துடன் ம.க. சிவாஜிலிங்கத்தை வழக்கிலிருந்து முற்றாக விடுதலை செய்தார்.

குற்றம் சாட்டப்பட்டவரான ம.க. சிவாஜிலிங்கத்தின் சார்பாக சட்டத்தரணிகள் சுரங்க பண்டார, லக்ஷ்மன் அபேவர்தன ஆகியோருடன் சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ்.இரத்தினவேல் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This