சுமந்திரனின் மனுவை நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் கோரிக்கை!

சுமந்திரனின் மனுவை நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் கோரிக்கை!

இணையவழி பாதுகாப்பு சட்டத்துக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்யாமலேயே நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.

குறித்த சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனு உயர் நீதிமன்றில் நேற்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

பிரியந்த ஜயவர்தன, ஷிரான் குணரத்ன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் இந்த மனு பரிசீலிக்கப்பட்டது.

தற்போது இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, சபாநாயகராலும் சான்றுரைப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் தலையிட உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை.

அரசியலமைப்புச் சட்டத்தின் 126வது பிரிவின்படி, நிர்வாகம் அல்லது நிறைவேற்றுத்துறையின் நடவடிக்கையால் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டால் மட்டுமே அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்ய முடியும்.

அப்படி எந்த நடவடிக்கையும் இங்கு நடைபெறவில்லை என சட்டமா அதிபர் சமர்ப்பணத்தை முன்வைத்தார்.

அதன்படி, அரசியலமைப்புடன் தொடர்புடைய பிரிவின் கீழ் ஒரு மனுவை சமர்ப்பிக்க எந்த சட்ட ஏற்பாடும் இல்லை என்பதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இவ்வாறு மனு தாக்கல் செய்வது சட்டத்திற்கு முரணானது எனவும் குறிப்பிட்டார்.

எனவே, இந்த அடிப்படை ஆட்சேபனைகளை ஏற்று, மனுவை முதலில் விசாரிக்காமல் தள்ளுபடி செய்யுமாறு சட்டமா அதிபர் நீதிமன்றை கோரியிருந்தார்.

அதன் பின்னர் மனுதாரர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ, இங்கு எந்த சட்டமும் சவால் செய்யப்படவில்லை எனவும் சபாநாயகரின் ஒரு செயல்பாடு மட்டுமே சவால் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

உயர்நீதிமன்றத்தின் நிபந்தனைகளின்படி சபாநாயகர் செயல்படவில்லை.

இந்த சட்டமூலத்தில் சபாநாயகர் கையெழுத்திட்டதையடுத்து, நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

இது நிர்வாக நடவடிக்கை வகையின் கீழ் வருகிறது.

இந்த நடவடிக்கையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் எனவும் இந்த மனுவை விசாரிக்கவும், உரிய நிவாரணம் வழங்கவும் நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டுமெனவும் கோரியிருந்தார்.

இரு தரப்பினரின் சமர்ப்பணங்களை கருத்தில் கொண்டு, மனுவை விசாரிக்கலாமா வேண்டாமா என்ற உத்தரவு பின்னர் அறிவிக்கப்படும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This