மணிப்பூரில் மீண்டும் வன்முறை: இருவர் பலி!

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: இருவர் பலி!

மணிப்பூரில் குகி இனத்தை சேர்ந்த காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். 25 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

மணிப்பூரில் பெரும்பான்மையாக வசிக்கும் மைத்தேயி சமூகத்தினருக்கும் குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் மோதல் ஏற்பட்டு பின்னர் அது இனக்கலவரமாக வெடித்தது. இந்த கலவரத்தில் இதுவரை ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். பலர் வீடுகளை இழந்து அகதிகளாகி உள்ளனர். கலவரங்களை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் தொடர்ந்து அங்கு வன்முறைச் சம்பவங்கள் நீடித்தபடியே உள்ளன.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு குகி சமூகத்தைச் சேர்ந்த காவலர் ஒருவர் ஆயுதம் தாங்கிய குழுக்களுடன் எடுத்துக் கொண்ட செல்பி வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சுராசந்த்பூர் பகுதியில் உள்ள எஸ்பி அலுவலகத்தை 300 க்கும் அதிகமான குகி இன மக்கள் முற்றுகையிட்டனர். அவர்களை கலைக்க போலீசார் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை பயன்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. போலீசார் மீது கற்களை வீசு போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். போலீஸ் வாகனங்கள் தீவைக்கப்பட்டன. இந்த மோதலில் 2 பேர் உயிரிழந்தனர். 25 க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தை அடுத்து, சுராசந்த்பூர் பகுதி முழுவதும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This