இலங்கையின் 76வது சுதந்திர தினம் இன்று!

இலங்கையின் 76வது சுதந்திர தினம் இன்று!

இலங்கையின் 76வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

காலி முகத்திடலில் சுதந்திர தின நிகழ்வுகளுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்தன ஆகியோரின் தலைமையில் இன்றைய நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

அதில் பங்கேற்பதற்காக வெளிநாட்டு இராஜதந்திரிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

அதன்படி, 76ஆவது சுதந்திர தின நிகழ்வில் பிரதம அதிதியாக தாய்லாந்து பிரதமர் ஷ்ரேதா தவிசின் கலந்துக்கொள்ளவுள்ளார்.

அவர் தலைமையிலான குழு நேற்றைய தினம் நாட்டுக்கு வருகைத்தந்தது.

இதேவேளை, தற்போதைய வளர்ச்சிப் பாதை உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் பாதையில் தொடர்ந்து செல்வதற்கும், செழிப்பை மீட்டெடுப்பதற்கும் கூட்டாக செயற்பட உறுதிபூண வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரவித்துள்ளார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள செய்தியில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நமது தேசம் சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டை நினைவுகூரும் போது, நிதி ரீதியாக வங்குரோத்தான நாடு என முத்திரை குத்தப்பட்டது.

எனினும், நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரத்தன்மையை நோக்கி திறம்பட வழிநடத்தியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஒரு விரிவான, நீண்ட கால தேசிய மறுசீரமைப்பு திட்டத்திற்கு இணங்க, கஷ்டங்களை சகித்த குடிமக்களின் உறுதியான ஆதரவின் காரணமாக, சாதனைகள் படிப்படியாக உணரப்பட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பயணம் முழுவதும் படிப்படியாக சவால்கள் விலகும், வாழ்க்கைச் சுமைகள் குறையும், பொருளாதாரம் வலுப்பெறுவதும் இலங்கை மறுமலர்ச்சி அடையுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது சுதந்திர தின செய்தியில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்து நாடு மெல்ல மெல்ல சரியான இலக்கை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கும் வேளையில் இந்த வருடத்திற்கான சுதந்திர தினம் கொண்டாடப்படுவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தனது சுதந்திர தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

உணவுப் பாதுகாப்பு, கிராமிய மறுமலர்ச்சி மற்றும் உற்பத்திப் பொருளாதாரம் போன்ற பல நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலம் நாடு அந்தக் கடினமான தடைகளைத் தாண்டியுள்ளதாக அவர் தமது சுதந்திர தினச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மக்களின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு உறுதியளிக்க வேண்டுமென சுதந்திர தினத்தில் அரசாங்கத்திற்கு வலியுறுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுதந்திர தின செய்தியில் தெரிவித்துள்ளார்.

மக்களின் சுதந்திரத்திற்கு வேலியிட்டு எல்லைகளை விதிக்கும் திட்டமொன்றை அரசாங்கம் ஏற்கனவே முன்னெடுத்திருப்பது அவல நிலையாகும்.

சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் அர்ப்பணிப்பு என்பது முழுப் பிரஜைகளின் பொறுப்பாகும்.

அதனைப் பாதுகாப்பதில் உறுதியாக இருப்பது ஆட்சியாளர்களின் பொறுப்பு என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறுகிறார்.

CATEGORIES
TAGS
Share This