ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியில் தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும் – செல்வம் அடைக்கலநாதன்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியில் தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும் – செல்வம் அடைக்கலநாதன்

“ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒற்றுமையாக ஒரு முடிவை எடுக்க வேண்டும். சிவில் அமைப்புக்களுடனும், இலங்கைத் தமிழரசுக் கட்சியுடனும் இது தொடர்பில் பேசுவோம். கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கட்சியுடனும் பேசுவதற்கு முயற்சிப்போம்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வவுனியாவில் உள்ள ரெலோ அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதி அண்மையில் வவுனியாவுக்கு விஜயம் செய்திருந்தார். இதன்போது நில அபகரிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக நாம் அவருடன் பேசியிருந்தோம். இன்னும் பல விடயங்களை பேசியிருந்தோம். நாம் கூறும் விடயங்கள் உடனடியாகத் தீர்க்கப்படும் என்ற நம்பிக்கையில் சென்றிருந்தோம். ஆனால், அது நடைபெறவில்லை. நாங்கள் கேட்ட விடயங்களுக்கான சரியான பதிலை அவர் தரவில்லை. சம்பிரதாயபூர்வமான ஒரு கூட்டமாகவே இது இடம்பெற்றது. பல அபிவிருத்திகள் அறிவிக்கப்பட்டாலும் கூட அதனை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை.

இதேவேளை, ஜனாதிபதி வந்து சென்ற பின்னர் வவுனியா புதிய பஸ் நிலையத்தில் இராணுவ முகாம் ஒன்று புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. அது என்ன தேவைக்காக அமைக்கப்பட்டது என்ற விடயம் தெரியவில்லை. எமது மக்களை அச்சுறுத்துவதற்கான செயற்பாடே அது. ஏற்கனவே பொலிஸ் சோதனைச் சாவடி அங்கு இருக்கின்றது. இந்நிலையில், இராணுவத்தின் தேவை என்ன என்று புரியவில்லை. இது தொடர்பாக நாம் நாடாளுமன்றிலும் ஜனாதிபதியிடமும் பேசுவோம். இது அகற்றப்பட வேண்டிய முகாம். சிவில் நிர்வாகம் என்பது பொலிஸாரிடம்தான் ஒப்படைக்கப்பட வேண்டும்.

ஜனாதிபதியின் வவுனியா வருகையின்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தமது ஆதங்கத்தைப் போராட்டத்தின் மூலம் வெளிப்படுத்தினர். இதன்போது கைது நடவடிக்கை இடம்பெற்றிருந்தது. காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் தலைவர் கைது செய்யப்பட்டார். இது கண்டிக்கப்பட வேண்டிய விடயம். தமது உறவுகளைத் தேடி பல வருடங்களாகப் போராடி வரும் ஒருவரை ஜனாதிபதிக்கு எதிரான போராட்டமாகப் பார்க்காது அவர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது எங்களின் கோரிக்கை.

இது ஒரு தேர்தல் ஆண்டு. ஜனாதிபதித் தேர்தலா அல்லது நாடாளுமன்றத் தேர்தலா எனப் பேசப்பட்டு வருகின்றது. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகப் பல ஊகங்கள் பேசப்படுகின்றன. வடக்கு – கிழக்கில் எமது மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாத சூழலில் இந்தத் தேர்தலைக் கையாளும் விதம் தொடர்பாக நாம் சிந்திக்க வேண்டும். அனைத்துக் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் இணைந்து ஒரு பொதுவேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக நாம் பரிசீலிக்கவேண்டும்.

எமது கோரிக்கைகளை சிங்கள வேட்பாளர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலையை நாம் உருவாக்க வேண்டுமானால் இந்த முயற்சியே பலனளிக்கும் என்று நான் நினைக்கின்றேன். அந்த ஒற்றுமை சாத்தியமா என்ற கேள்வி இருக்கின்றது. இதில் பல கட்சிகள் தங்களது கருத்துக்களை சொல்லியிருக்கிறார்கள். அதுபோல் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் இந்தத் தேர்தலைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்ற தனது கருத்தைக் சொல்லியிருக்கின்றார். தமிழரசுக் கட்சி இன்னும் முடிவை அறிவிக்கவில்லை. இருந்தாலும் இடைமட்ட தலைவர்கள் பொதுவான கருத்துக்களைச் சொல்லிக் கொண்டு இருக்கின்றார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிவில் அமைப்புக்களுடனும், தேசிய கட்சிகளுடனும் பேசி ஒரு ஒற்றுமையான முடிவுக்கு வருவது சாலச்சிறந்ததாக இருக்கும். இந்த ஒற்றுமை சாத்தியமா என்ற கேள்வி இருந்தாலும், சிவில் அமைப்புக்கள், தமிழரசுக் கட்சி என்பவற்றுடன் பேச வேண்டியுள்ளது. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கட்சியுடனும் பேசுவதற்கான முயற்சியை நாம் மேற்கொள்வோம்.

அந்தவகையில் முழுமையாக எடுக்கும் முடிவே சாத்தியமாகும். தென்னிலங்கை வேட்பாளர்கள் யாராக இருந்தாலும் அவர்களை ஒரு நிபந்தனைக்குட்படுத்த வேண்டும்.” – என்றார்.

CATEGORIES
TAGS
Share This