தேர்தல் நெருங்குவதால் நெருக்கடியில் அரசு; ஈஸ்டர் தாக்குதல் அறிக்கைகளை வெளிப்படுத்த அழுத்தம்

தேர்தல் நெருங்குவதால் நெருக்கடியில் அரசு; ஈஸ்டர் தாக்குதல் அறிக்கைகளை வெளிப்படுத்த அழுத்தம்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பிலான இரண்டு ஜனாதிபதி ஆணைக்குழுக்களினதும் விசாரணை அறிக்கைகளை உடனடியாக அரசாங்கம் வெளியிட வேண்டும் எதிர்க்கட்சிகளால் அழுத்தகம் கொடுக்கப்பட்டு வருவதால் அவற்றை பகிரங்கப்படுவது குறித்து அரச உயர்தட்டத்தில் ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளன.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்கவின் காலத்தில் விசாரணைகளை மேற்கொண்ட இரண்டு ஜனாதிபதி ஆணைக்குழுக்களினதும் அறிக்கைகள் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னர் அவற்றை அரசாங்கம் வெளியிடாவிட்டால் தாம் வெளியிட உள்ளதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கடந்த திங்கட்கிழமை ஊடகச் சந்திப்பொன்றில் கூறியிருந்தார்.

இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதுடன், குறித்த அறிக்கைகளை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்க உதய கம்மன்பிலவுக்கு மூன்று நாட்கள் காலக்கெடு விதிப்பதாக கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பில் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்திருந்தார்.

என்றாலும், மறுநாள் மீண்டும் ஊடகச் சந்திப்பில் கருத்து வெளியிட்ட உதய கம்மன்பில, குறித்த அறிக்கைகளை எதிர்வரும் திங்கட்கிழமைக்குகள் வெளியிடாவிட்டால் தாம் அந்த அறிக்கைகளை வெளியிட உள்ளதாக எச்சரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தற்போது குறித்த அறிக்கைகளை வெளியிட வேண்டுமென அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

பொதுத் தேர்தல் நெருங்கியுள்ள சூழலில் இந்த அறிக்கைகளை அரசாங்கம் தாமதப்படுத்த முற்பட்டால் தேர்தல் மேடைகளில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதால், அறிக்கைகளை பகிரங்கப்படுத்துவது குறித்து உயர்மட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

CATEGORIES
Share This