வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்பாக சுட்டு கொல்லப்பட்டவருக்கு நீதி கிட்ட வேண்டும்; குடும்பத்தவர்கள் கோரிக்கை 

வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்பாக சுட்டு கொல்லப்பட்டவருக்கு நீதி கிட்ட வேண்டும்; குடும்பத்தவர்கள் கோரிக்கை 

2021 ஆம் ஆண்டு 6மாதம் 21ஆம் திகதி மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சரின் வீட்டுக்கு முன்பாக தனது சகோதரன் படுகொலைசெய்யப்பட்டதாகவும் இதற்குரிய விசாரணைகளில் தங்களுக்கு நம்பிக்கையற்ற நிலையில் புதிய ஜனாதிபதி இது தொடர்பான உண்மையான விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்கையெடுக்கவேண்டும் என குடும்ப உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2021-06-21ஆம் திகதியன்று மட்டக்களப்பு மன்றேசா வீதியில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் ஊறணியை சேர்ந்த ம.பாலசுந்தரம் என்பவர் படுகொலைசெய்யப்பட்டார்.

இது தொடர்பில் குறித்த இராஜாங்க அமைச்சரின் மெய்பாதுகாவலர் கைதுசெய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் இது தொடர்பான வழக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பான சாட்சியங்களை அழிக்கும் முயற்சிகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதுடன் வழக்கினை திசைமாற்றும் செயற்பாடுகளையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளதாகவும் புதிய ஜனாதிபதி தலையிட்டு தமக்கான நீதியைப் பெற்றுத்தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டு.ஊடக அமையத்தில் நேற்று வியாழக்கிழமை,உயிரிழந்த பாலசுந்தரத்தின் தந்தை,தாயார்,சகோதரி இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துகளை முன்வைத்தார்கள்.

குறித்த சம்பவத்தின்போது தமது சகோதரன் தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட பின்னரே அவர் மீது துப்பாக்கிசூடு நடாத்தப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுத்தால் உண்மைகள் வெளிவரும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த காலத்தில் ஆட்சியாளர்களின் அதிகாரத்திலிருந்த இராஜாங்க அமைச்சரின் வீட்டுக்கு அருகிலேயே இந்த சம்பவம் நடைபெற்றதனால் தமது அதிகாரத்தினைக்கொண்டு சாட்சியங்களை மாற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் இது தொடர்பில் ஜனாதிபதி விசேட விசாரணைக்கு பணிப்புரை விடுக்கவேண்டும் எனவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

CATEGORIES
Share This