தேர்தலை யுத்தம் போல் நினைக்க வேண்டும்: ரணில் தோற்றால் அழிவு நிச்சயம்

தேர்தலை யுத்தம் போல் நினைக்க வேண்டும்: ரணில் தோற்றால் அழிவு நிச்சயம்

இலங்கையில் இப்போது சரியான தலைவர்கள் யார் என்பதைத் தீர்மானிக்க மக்களுக்கு அரிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்று முன்னாள் அமைச்சரும் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

பேருவளை கடற்கரை விளையாட்டரங்கில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘ரணிலால் முடியும்’ வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“ஒருநாள் ஒரு வீட்டில் தீப்பற்றிக்கொண்டது. வீட்டில் உள்ளவர்கள் அச்சத்தில் இருந்தனர். அவர்களை மீட்க எவரும் வரவில்லை. அப்போது ஒரு தலைவர் வந்து தீயை அணைத்தார்.

பின்னர் வந்த சிலர் வீட்டுக்கு வர்ணம் பூசினர். பின்னர் தீயை அணைத்தவரை அவர்கள் திருடர் என்று சொன்னார்கள்” – என்று புத்த பெருமான் ஒரு போதனையில் சொல்லியிருக்கிறார். அப்படித்தான் இலங்கையின் நிலைமையும் இருந்தது.

ஜனாதிபதி பதவியைத் தட்டில் வைத்து தந்தபோதும்கூட எவரும் நாட்டை ஏற்க முன்வரவில்லை. அப்போது சில காலம் கஷ்டங்களைப் பொறுத்துக்கொள்ளுமாறு மக்களிடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரினார்.

அரசியல்வாதிகளுக்குப் பொறுமை இருக்கவில்லை. மக்களுக்குப் பொறுமை இருந்தது. எனவே, நாட்டில் இப்போது சரியான தலைவர்கள் யார் என்பதைத் தீர்மானிக்க மக்களுக்கு அரிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

கிறீஸ் நாட்டில் ஒரே வருடத்தில் நான்கு ஆட்சிகள் வந்தன. அப்போது அரச ஊழியர்களின் சம்பளம் 50 சதவீதமாக வெட்டப்பட்டது.

ஆனால், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்களுக்கான எந்த நிவாரணத்திலும் கைவைக்கவில்லை. நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்க வழிசெய்தார். அதனால் இந்தப் பாதையை மாற்றினால் பாதகமான விளைவுகளை நாடு எதிர்கொள்ளும்.

அடுத்துவரும் தேர்தலை யுத்தம் போல் நினைக்க வேண்டும். அந்த யுத்தத்தில் தோற்றால் நாட்டு மக்கள் பெரும் அழிவுகளுக்கு முகம்கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை கருத்தில் கொண்டு சரியான தலைவரை தெரிவு செய்ய வேண்டும்.” – என்றார்.

CATEGORIES
Share This