உலகின் மிக வயதான பெண்மணி உயிரிழப்பு.. யார் இவர்? கின்னஸ் சாதனைப் பட்டம் அடுத்து யாருக்கு?

உலகின் மிக வயதான பெண்மணி உயிரிழப்பு.. யார் இவர்? கின்னஸ் சாதனைப் பட்டம் அடுத்து யாருக்கு?

உலகின் மிக வயதான பெண்மணி என்று கின்னஸ் சாதனை படைத்த மரியா பிரான்யாஸ் தனது 117 வயதில் உயிரிழந்துள்ளார். அமெரிக்காவில் பிறந்த மரியா பிரான்யாஸ் இரண்டு உலகப் போர்களை பார்த்ததுடன், ஸ்பெயின் உள்நாட்டுப் போர், 1918 ஆம் ஆண்டு பெரிய அளவில் பரவிய காய்ச்சல் மற்றும் கோவிட் தொற்று ஆகியவற்றை பார்த்தவர் ஆவார்.

மரியா பிரான்யாஸ் கடந்த 1907 ஆம் ஆண்டு, மார்ச் 4ஆம் தேதி அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் பிறந்தார். அதன்பின் அவரது குடும்பம் சொந்த நாடான ஸ்பெயினுக்கு குடிபெயர்ந்தது.

1931 இல் திருமணம் செய்துகொண்ட மரியாவுக்கு 3 குழந்தைகள், 11 பேரக் குழந்தைகள் மற்றும் 13 கொள்ளுப் பேரக் குழந்தைகள் உள்ளனர். வடகிழக்கு ஸ்பெயினில் உள்ள ஓலோட் நகரில் சாண்டா மரியா என்ற முதியோர் இல்லத்தில் வசித்து வந்த மரியா பிரான்யாஸ் நேற்று முன் தினம் [ஆகஸ்ட் 20] காலமானார். மரியா அவர் விரும்பியபடியே தூக்கத்தில் அமைதியான முறையில் வலியில்லாமல் உயிரிழந்தார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

உலகின் மிக வயதான பெண்மணியாக மரியா பிரன்யாஸ் உயிரிழந்ததை அடுத்து ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 116 வயது மூதாட்டியான தொமிக்கோ இதூக்கா [Tomiko Itooka] உலகின் மிக வயதான பெண்மையாக கின்னஸ் புத்தக அங்கீகாரத்தை பெற்றுள்ளார். 1908 ஆம் ஆண்டு மே 23 இல் பிறந்த இதூக்கா, இளமைக்காலங்களில் மலையேற்ற வீரராக இருந்துள்ளார். 3 குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் இதூக்கா ஜப்பான் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள அசியா [Ashiya] நகரின் வசித்து வருகிறார்.

CATEGORIES
Share This