தமிழரசுக் கட்சி உறுதியான தீர்மானத்தை எடுக்கவில்லை – விக்கி கவலை!

தமிழரசுக் கட்சி உறுதியான தீர்மானத்தை எடுக்கவில்லை – விக்கி கவலை!

தமிழ் மக்களின் அடையாளமாக விளங்கும் பா.அரியேத்திரனுக்கு அனைத்து தமிழர்களும் வாக்களிக்க வேண்டும் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தமிழ் வேட்பாளர் விவகாரத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி உறுதியான தீர்மானத்தை எடுக்காமல் இருப்பது கவலையளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்களின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு விரைவான தீர்மானத்தை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்று இடம்பெற்ற வேட்புமனு கையளிப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் பொது வேட்பாளரான பா.அரியேத்திரன் சங்கு சின்னத்தில் போட்டியிடுகிறார். ஜனாதிபதித் தேர்தலில் கட்சி சார்பில் சிந்திக்காமல் தமிழ் மக்கள் சார்பில் சிந்திக்க வேண்டும் என்பதுடன், இதற்கான கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கட்சி ரீதியில் முரண்பட்டுக் கொண்டிருக்காமல் தமிழ் மக்களின் எதிர்காலம் குறித்து சிந்தித்து ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்பதுடன், தமிழ் மக்களின் அடையாளமாக பா.அரியேந்திரனை 89 கட்சி தரப்பினர் தேர்ந்தெடுத்துள்ளார்கள் எனவும், இனி அவரை பற்றியோ, அவரின் கட்சி பற்றியோ பேசுவது அவசியமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இலங்கை தமிழரசுக் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்கின்றதாக வெளிப்படையாக தெரிவிப்பதாகவும், ஆனால் ஒரு சிறுபான்மை தரப்பினர் இதனை தடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆகவே இவர்கள் தமது முரண்பாடுகளை விட்டு விட்டு தமிழ் வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டும் என கோரிக்கை விடுப்பதாக தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்;.

CATEGORIES
Share This