மாணவி ஒரு வருடமாக துஷ்பிரயோகம் – 17 மாணவர்கள் கைது!

மாணவி ஒரு வருடமாக துஷ்பிரயோகம் – 17 மாணவர்கள் கைது!

தனமல்வில பிரதேசத்தில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவியை ஒரு வருடமாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 17 பாடசாலை மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பெண் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதித்த போது அங்கிருந்த வைத்தியர் ஒருவர் சிறுமியை அச்சுறுத்தியதால், தற்கொலைக்கு முயன்றதாக சிறுமியின் தாய் குற்றம் சுமத்தியுள்ளார்.

தனமல்வில பிரதான பாடசாலை ஒன்றில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி அதே பாடசாலையை சேர்ந்த மாணவன் ஒருவனை காதலித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த காதலன் மாணவியை ஏமாற்றி தனது நண்பரின் வீட்டிற்கு அழைத்துச் சென்று, அங்கு முதல் முறையாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

வீட்டில் இருந்த மேலும் சில மாணவர்கள் மாணவிக்கு மதுவை குடிக்க வற்புறுத்தி, துஷ்பிரயோகம் செய்து பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த வீடியோவை காட்டி மாணவர்கள் 2023 ஆம் ஆண்டு முதல் 7 தடவைகள் மாணவியை கூட்டுப் பலாத்காரம் செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதில் சம்பந்தப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 17 எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் கிரிந்தி ஓயாவிற்கு அருகில், 7 மாணவர்கள் சேர்ந்து மாணவியை கூட்டு பலாத்காரம் செய்து வீடியோ எடுத்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்த பாடசாலையின் அதிபர் உள்ளிட்ட ஒழுக்காற்று குழுவிற்கு தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாடசாலையின் அதிபர் மற்றும் ஒழுக்காற்றுக் குழுவினர், சம்பந்தப்பட்ட மாணவர்களையும் மாணவியையும் அழைத்து வந்து உண்மைகளை விசாரித்து, பாடசாலைக்கு களங்கம் விளைவிக்காத வகையில் சம்பவத்தை மூடி மறைத்துள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களில் தனமல்வில பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரிய ஆலோசகர் ஒருவரின் மகனும் அடங்குவதாகவும், மாணவியின் தாயார் பாடசாலை ஆசிரியை என்பதும் தெரியவந்துள்ளது.

தனக்கு நடந்த இந்த கொடுமை மற்றும் வன்முறைகள் குறித்து மாணவி தனது வீட்டின் சுவர்களில் பல்வேறு ஓவியங்களை வரைந்துள்ளார்.

எனினும் இந்த சம்பவம் தொடர்பில் தனமல்வில பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, மாணவியை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்தியதில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் இன்று (12) ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

CATEGORIES
Share This