மூதூர் – பெரியவெளி அகதிமுகாம் படுகொலையின் 38 வது நினைவேந்தல்

மூதூர் – பெரியவெளி அகதிமுகாம் படுகொலையின் 38 வது நினைவேந்தல்

மூதூர் பிரதேசத்தின் தெற்கு பகுதியின்  A15 பிரதான வீதி மல்லிகைத்தீவு சந்தியின் ஊடாக செல்கையில் 500 மீற்றர் தொலைவில் மணற்சேனை, பெருவெளி கிராமங்கள் அமைந்துள்ளன.

1985 ஆம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரத்தின் போது இம் மக்கள் இடம் பெயர்ந்து பின் மீள குடியேறி அச்சத்தின் மத்தியில் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் 1986ம் ஆண்டு யூலை மாதம் விடுதலைப் புலிகள் அமைப்பால் மல்லிகைத் தீவு சந்தியில் மேற்கொள்ளப்பட்ட கண்ணிவெடி தாக்குதலில் மூதூர் சென்று திரும்பிய தெகிவத்தை, சேருநுவர ஆகிய இராணுவ முகாம்களை சேர்ந்த 40 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இச் சந்தர்ப்பத்திலும் அப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இடம் பெயர்ந்து ஒரு சில நாட்களின் பின் மீண்டும் தமது வீடுகளுக்கு வந்து வசிக்கத் தொடங்கியதுடன் சில குடும்பங்கள் பெருவெளி பாடசாலையில் அமைக்கப்பட்டிருந்த அகதி முகாமிலும்; தங்கி இருந்தனர். அத்தோடு இவ் அகதி முகாமில் பாரதிபுரம், மல்லிகைத்தீவு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 75 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாடசாலை கட்டிடத்திலும் அவ் வளாகத்தினுள் ஓலைக் கொட்டில்கள் அமைத்தும் தங்கி இருந்தனர். 

இவ்வாறான நிலையில் கண்ணிவெடி சம்பவம் நடைபெற்று ஒரு மாதம் கழித்து இராணுவத்தினர் கொல்லப்பட்டதற்கு பழி தீர்க்கும் முகமாக 1986.07.16 அன்று அதிகாலை 03:00 மணியளவில் மணற்சேனை பெருவெளி ஆகிய கிராமங்கள் கட்டைபறிச்சான் , மூதூர், தெகிவத்த, சேருநுவர ஆகிய இராணுவ முகாம்களைச் சேர்ந்த 300 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினராலும், ஊர்காவல் படையினராலும் சுற்றி வளைக்கப்பட்டன. அதன்பின்னர் வீடு வீடாக புகுந்த இராணுவத்தினர் வீட்டில் பயத்தில் உறைந்து இருந்த ஆண்களை ஒவ்வொருவராக சுட்டுக் கொலை செய்து கொண்டு வந்தனர். அதிகாலை நேரம் நாய்கள் குரைப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியதால் சில ஆண்கள் ஓடி ஒழிந்து கொண்டனர். இவ்வாறு தமது கொலை வெறியை ஆரம்பித்த இராணுவத்தினரும் ஊர்காவல் படையினரும் பெருவெளி அகதி முகாமில் தஞ்சம் அடைந்திருந்த மக்களை சுற்றிவளைத்து அங்கிருந்த 17 ஆண்களை ஒன்று திரட்டி ஓர் இடத்தில் முழந்தாழிட வைத்து குடும்பத்தினர் கண் எதிரே சுட்டுக் கொண்று குவித்தனர். அகதி முகாம் மரண ஓலமாக மாறியது. இவ்வாறு தமது கொலைத் தாண்டவத்தினை காலைவரை அரங்கேற்றிய இராணுவத்தினர் அகதி முகாமில் படுகொலை மேற்கொண்டதனை மறைப்பதற்கான திட்டத்தினை தீட்டி அகதி முகாமில் படுகொலை செய்யப்பட்ட 17 அப்பாவி ஆண்களின் சடலங்களை தமது இராணுவ வாகனத்தினைக் கொண்டு ஏற்றி கட்டைபறிச்சான்  இராணுவ முகாமிற்கு எடுத்துச் சென்றனர். 

இராணுவத்தினர் வெளியேறிய பின் பெருவெளி, மணற்சேனை கிராமங்களில் இருந்து 25 ஆண்களின் சடலமும் 02 பெண்களின் சடலமும் மீட்கப்பட்டு மணற்சேனை இந்து மயானத்தில் ஓர் பெரிய குழி அகழப்பட்டு மாலை 05:00 மணியளவில் அடக்கம் செய்யப்பட்டன. பின் அகதி முகாமிலிருந்து கொண்டு செல்லப்பட்ட 17 ஆண்களின் சடலங்களும் 1986.07.18 அன்று பொது மக்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. இச் சடலங்கள் இந்து மயானத்தில் ஓர் குழியில் அடக்கம் செய்யப்பட்டன. இப் படுகொலை சம்பவத்தில் 42 ஆண்கள், 02 பெண்கள் உட்பட 44 அப்பாவிப் பொது மக்கள் பரிதாபகரமாக படுகொலை செய்யப்பட்டனர்.

அத்துடன் குறித்த தினத்தில் அங்கிருந்த 11 பேரை கைது செய்து அழைத்துச் சென்றனர். இவர்களில் 8 பேர் விசாரணையின் பின் விடுவிக்கப்பட்டதோடு 3பேர் சிறையில் அடைக்கப்பட்டு சில வருடங்களின் பின் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் அப்போது திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கௌரவ. இரா. சம்பந்தன் அவர்களும். அ.தங்கத்துரை அவர்களும் அரச உயர்மட்டங்களுடன் கலந்துரையாடி பல உதவிகளை செய்திருந்தார்கள் அத்துடன் இந்து இளைஞர் பேரவையும் அதன் பொதுச் செயலாளரான சிவபாதசுந்தரம் அவர்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உடனடித் தேவைகளை செய்திருந்தார்கள்.

இப்படுகொலை சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் பெயர் விபரம்                    

01.இராசையா செல்லத்துரை – பாரதிபுரம்

02.ஆரியத்தம்பி சிவசுப்ரமணியம் – பாரதிபுரம்

03.சித்திராவி கனகய்யா – பாரதிபுரம்

04.முத்துக்குமார் சிவநாயகமூர்த்தி – பாரதிபுரம்

05.இராசையா குமாரதுரை – பாரதிபுரம்

06.வேலுப்பிள்ளை ஆறுமுகம் – மல்லிகைத்தீவு

07.கோணாமலை இராசநாயகம் – மல்லிகைத்தீவு

08.கதிரவேல் நாகேந்திரம் – மல்லிகைத்தீவு

09.கோணாமலை வீரக்குட்டி – மல்லிகைத்தீவு

10.கதிர்காமத்தம்பி வைரக்குட்டி – மல்லிகைத்தீவு

11.வெற்றிவேல் குணசிங்கம் – மல்லிகைத்தீவு

12.சித்திரவேல் குணசிங்கம் – மல்லிகைத்தீவு

13.சித்திரவேல் ஜெகன் – மல்லிகைத்தீவு

14.சித்திரவேல் பத்தக்குட்டி – மல்லிகைத்தீவு

15.ஆலப்பிள்ளை – மல்லிகைத்தீவு

16.செல்லையா சுந்தரலிங்கம் – மல்லிகைத்தீவு

17.பொன்னையா – மல்லிகைத்தீவு

18.மாரிமுத்து சிறிகந்தராசா – மல்லிகைத்தீவு

19.வைரமுத்து வைரக்கட்டயன் – மல்லிகைத்தீவு

20.மாரிமுத்து யோகராசா – மல்லிகைத்தீவு

21.சி. மகேந்திரன் – மணற்சேனை

22.வீரக்குட்டி மயில்வாகனம் – மணற்சேனை

23.செல்லையா சித்திரவேல் – மணற்சேனை

24.வடிவேல் நவரெட்;ணராசா – மணற்சேனை

25.இராசகுலம் – மணற்சேனை

26வைரமுத்து குணசேகரம் – மணற்சேனை

27அழகுதுரை சத்தியசீலன் – மணற்சேனை

28செல்லத்தம்பி தர்மராசா – மணற்சேனை

29.கந்தவனம் கமலம் – மணற்சேனை

30.சிவசுப்ரமணியம் யோகதாஸ் – மணற்சேனை

31.பத்தக்குட்டி கனகநாயகம் – மணற்சேனை

32.மகேந்திரன் – மணற்சேனை

33.சின்னத்துரை குணநாயகம் – பெரியவெளி

34கந்தையா தங்கராசா – பெரியவெளி

35.காளிக்குட்டி அருளம்பலம் – பெரியவெளி

36.பசுபதி மோகனதாஸ் – பெரியவெளி

37.சேதுநாதன் கோணாமலை – பெரியவெளி

38.தம்பிமுத்து தங்கராசா – பெரியவெளி

39.தியாகராசா வடிவேல் – பெரியவெளி

40.நாகராசா சரஸ்வதி – பெரியவெளி

41.பத்தக்குட்டி மகாலிங்கம் – பெரியவெளி

42.பத்தக்குட்டி யோகராசா – பெரியவெளி

43.பிரான்சிஸ் மார்டின் – இருதயபுரம்

44.அரசரெட்டினம் ஆலப்பிள்ளை – புன்னையடி, ஈச்சிலம்பற்று.

மூதூர் – பெரியவெளி அகதி முகாமில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்தின் 37வது நினைவுநாள் நிகழ்வு பாதிக்கப்பட்ட மக்களினால் இன்று (16) பெரியவெளி கிராமத்தில் நினைவுகூரப்படுகின்றது.

மூதூர் பெரியவெளி பாடசாலையில் அமைக்கப்பட்டிருந்த அகதி முகாமில் பாதுகாப்புத்தேடி தஞ்சம் புகுந்திருந்த பொதுமக்கள் 40க்கு பேருக்கு மேற்பட்டவர்கள் ஆயுத தாரிகளினால் சுட்டும், வெட்டியும், எரித்தும் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள் இவர்களின் ஆத்மசாந்தி வேண்டி அப்பகுதி மக்களால் இன்று நினைவுநாள் நிகழ்வு முன்னெடுக்கப்படுகின்றது.

திருகோணமலை – மட்டக்களப்பு  A15 பிரதான வீதியின் மல்லிகைத்தீவு சந்தியில் இருந்து 500 மீற்றர் தொலைவில் அமைந்துள்ள பெரியவெளி பாடசாலை அகதிமுகாமில் பாரதிபுரம், மல்லிகைத்தீவு, மணற்சேனை, பெரியவெளி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 75 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாடசாலை கட்டிடத்திலும் அவ் வளாகத்தினுள் ஓலைக் கொட்டில்கள் அமைத்தும் தங்கி இருந்தனர். 1986ம் ஆண்டு யூலை மாதம் 16ம் திகதி அதிகாலை 03:00 மணியளவில் மணற்சேனை, பெரியவெளி ஆகிய கிராமங்களில் இருந்த மக்கள் 300 இற்கும் மேற்பட்ட ஆயுததாரிகளினால் சுற்றி வளைக்கப்பட்டு சுட்டும் வெட்டியும் எரித்தும் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள்.  இப் படுகொலை சம்பவத்தில் 02 பெண்கள் உட்பட 44 அப்பாவிப் பொதுமக்கள் பரிதாபகரமாக உயிரிழந்தார்கள்.

கிராமத்துக்குள் நுழைந்த ஆயுததாரிகளினால் வீடுகளில் இருந்தவர்களில் 25 ஆண்களும் 2 பெண்களும் படுகொலை செய்யப்பட்டதுடன் பெருவெளி அகதி முகாமில் தஞ்சம் அடைந்திருந்த மக்களை சுற்றிவளைத்து அங்கிருந்த 17 ஆண்களை ஒன்று திரட்டி ஓர் இடத்தில் முழந்தாழிட வைத்து குடும்பத்தினர் கண் எதிரே சுட்டுக் கொன்றனர். 

அத்துடன் குறித்த தினத்தில் அங்கிருந்த 11 பேர் கைது செய்து அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்கள் இவர்களில் 8 பேர் விசாரணையின் பின் விடுவிக்கப்பட்டதோடு 3பேர் சிறையில் அடைக்கப்பட்டு சில வருடங்களின் பின் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். முகாமில் வைத்து படுகொலை செய்யப்பட்டவர்களது 17 பேரின் சடலங்களும் கட்;டைபறிச்சான் GPS இராணுவ முகாமில் வைத்து பொது மக்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

CATEGORIES
Share This