வடக்கு இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அறிவித்தல்: தொடரும் தாக்குதல்கள்

வடக்கு இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அறிவித்தல்: தொடரும் தாக்குதல்கள்

இஸ்ரேலில் ஹிஸ்புல்லாஹ் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் வடக்கு இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அறிவித்துள்ளது.

இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தில் சுமார் 2,000 இலங்கையர்கள் பணிபுரிவதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

அவர்கள் விவசாயம் மற்றும் பராமரிப்பு துறைகளில் வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரேஷ்ட ஹிஸ்புல்லாஹ் கமாண்டர் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக லெபனானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான தாக்குதல்களால் 15,000 ஏக்கர் உலர் புல்வெளிகளும் விளைநிலங்களும் எரிந்து நாசமாகியுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்தார்.

நிலவும் கடும் வறட்சி காரணமாக பல பகுதிகளுக்கு தீ பரவியுள்ளதாகவும், நிலைமையை கட்டுப்படுத்த இஸ்ரேல் தீயணைப்பு வீரர்கள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்நிலைமையைக் கருத்தில் கொண்டு, குறித்த பிரதேசத்தில் வசிப்பவர்கள் தமது பாதுகாப்பில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் எனவும் அத்தியாவசிய விடயங்களுக்கு அன்றி பணியிடங்களை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.

CATEGORIES
Share This