மாறி மாறி உண்மையை சொன்ன டிரம்ப், பைடன் – களைகட்டிய அமெரிக்க தேர்தல்

மாறி மாறி உண்மையை சொன்ன டிரம்ப், பைடன் – களைகட்டிய அமெரிக்க தேர்தல்

அமெரிக்காவில் வரும் நவம்பர் 5-ம் திகதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். இந்த தேர்தலின் முக்கிய அம்சமாக, வேட்பாளர்கள் பல்வேறு கட்டங்களில் நேருக்கு நேர் விவாதிப்பது வழக்கம்.

அந்த வகையில் முதலாவது நேரடி விவாத நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மொத்தம் 90 நிமிடம் விவாதம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. விவாதத்தில் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது உள்ளிட்ட கடுமையான விதிமுறைகள் உள்ளன. பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.

ஜோர்ஜியா தலைநகர் அட்லாண்டாவில் நடைபெற்ற நிகழ்வில் ஜோ பைடனும், டொனால்ட் டிரம்பும் நேருக்கு நேர் சந்தித்து விவாதித்தனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் பொருளாதார பிரச்சனையை மையமாக வைத்து விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது தான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பட்டியலிட்டு ஜோ பைடனும், டொனால்ட் டிரம்பும் வாக்காளர்களிடம் ஆதரவு கேட்டனர். தங்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கும்? என்பது குறித்தும் விளக்கம் அளித்தனர்.

அப்போது, டிரம்ப் நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர் என பைடன் கூறியதற்கு, ஜெயிலுக்கு போக வேண்டியது யார் என்பதை கமிட்டி முடிவு செய்யும். பைடனின் மகனும் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட குற்றவாளி தான். பைடன் கூறும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என நிரூபிக்கப்பட்டுள்ளன. நாளுக்கு நாள் எனக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வருகிறது. வேலையை ஒழுங்காக செய்யாதவர்களை பணிநீக்கம் செய்துவிடுவேன்.

குற்றவாளிகளை அனுமதிப்பவர்களை வேலையை விட்டு நீக்கி இருக்கிறீர்களா? எல்லையை திறந்து அன்னியர்களை அனுமதிக்க நினைக்கிறார் பைடன். அவர் மீண்டும் அதிபரானால் அமெரிக்காவை யாராலும் காப்பாற்ற முடியாது. அமெரிக்க வரலாற்றிலேயே மோசமான அதிபர் டைபன் தான். மிகப்பெரிய நிதி பற்றாக்குறை பைடன் ஆட்சியல் தான் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவை சீனா அழித்து கொண்டிருப்பதை அனுமதிக்கிறார் பைடன். எல்லையில் சட்ட விரோத குடியேற்றங்களால் போதைப் பொருள் புழக்கம் அதிகரிப்பு. அமெரிக்காவில் போதைப்பொருள் புழக்கம் பைடன் ஆட்சியில் அதிகரித்துள்ளது. நான் ஆட்சிக்கு வந்தவுடன் ரஷியாவில் உள்ள பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள். மனதளவிலும், உடல் அளவிலும் நான் நல்ல நிலையில் தான் இருக்கிறேன் என்று டிரம்ப் கூறினார்.

இதனிடையே, மகனின் மறைவுக்கு பிறகு அரசியலுக்கு வரவேண்டாம் என நினைத்தேன். அமெரிக்க வரலாற்றிலேயே மோசமான அதிபராக இருந்தவர் டிரம்ப். போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவதில் முழு கவனம் செலுத்தி வருகிறோம். மிக மிக மோசமான பொருளாதாரத்தை என்னிடம் விட்டுச்சென்றார் டிரம்ப். அமெரிக்காவில் தற்போதைய பொருளாதாரம் மாறி உள்ளது. எத்தனை பிரச்சனை இருந்தாலும் உலகின் முன்னணி நாடாகவே தற்போதும் திகழ்ந்து வருகிறது என்று பைடன் கூறினார்.

CATEGORIES
Share This