67 பேருடன் பறந்துகொண்டிருந்த அவுஸ்திரேலிய விமானத்தில் தீ : நியூசிலாந்தில் அசவசரமாக தரையிறக்கம்

67 பேருடன் பறந்துகொண்டிருந்த அவுஸ்திரேலிய விமானத்தில் தீ : நியூசிலாந்தில் அசவசரமாக தரையிறக்கம்

அவுஸ்திரேலிய விமானம் ஒன்று புறப்பட்டு சிறிது நேரத்தில் அதன் இயந்திரம் தீப்பிடித்ததையடுத்து நியூசிலாந்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

போயிங் 737-800 என்ற வெர்ஜின் அவுஸ்திரேலிய விமானம் நியூசிலாந்தின் குயின்ஸ்டவுன் நகரத்தில் இருந்து மெல்பர்ன் நோக்கி புறப்பட்டது.இந்நிலையில், விமானத்தின் இயந்திரம் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.

இதனை தொடர்ந்து விமானம் அவசரமாக குயின்ஸ்டவுனுக்கு தெற்கே 150 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள இன்வர்கார்கில் நகரத்திலுள்ள விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிரக்கப்பட்டது.

இந்த விமானத்தில் 6 பணியாளர்கள் உட்பட 67 பேர் இருந்துள்ளனர்.

இயந்திரம் ஒன்றில் இருந்து தீப்பிழம்புகள் வருவதைக் கண்டதாகவும், பலத்த சத்தம் கேட்டதாகவும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.

விமான இயந்திரத்தில் பறவை ஒன்று சிக்கியமையே தீப்பிடிக்க காரணம் என குயின்ஸ்டவுன் விமான நிலையத்தின் தலைமை நிர்வாகி க்ளென் சோவ்ரி தெரிவித்துள்ளார்.

ஒரு இயந்திரத்தை மட்டும் பயன்படுத்தி இயங்குவதற்கும் தரையிறங்குவதற்கும் ஏற்ற வகையில் விமானங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

நியூசிலாந்தின் விமான நிலையங்களில் ஒவ்வொரு 10,000 விமானங்களின் பயணங்களின் போது 4 விமானங்கள் பறவைகளால் தாக்கப்படுவதாக அந்த நாட்டின் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை நிறுவனம் அதன் இணையதளத்தில் தெரிவித்துள்ளது

CATEGORIES
Share This