எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் நிறைவேற்று அதிகாரத்தை இரத்துச் செய்வதாக கூறவில்லை

எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் நிறைவேற்று அதிகாரத்தை இரத்துச் செய்வதாக கூறவில்லை

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முன்வந்திருக்கும் எந்தவொரு வேட்பாளரும் நிறைவேற்று அதிகாரத்தை இரத்துச் செய்வதாக கூறவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.  

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை சாதக, பாதக அம்சங்களுடன் கூடியதாகவே காணப்படுவதாகவும், ஜனாதிபதிக்கு உள்ள நிறைவேற்று அதிகாரத்தினாலேயே இலங்கையின் பொருளாதாரத்தை முன்னேற்றவும் 30 வருட யுத்தத்தை வெற்றிகொள்ளவும் முடிந்ததுள்ளது என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.   

இளம் சட்டத்தரணிகளுடன் நடைபெற்ற What’s New சட்ட மறுசீரமைப்பு தொடர்பில் 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற செயலமர்வில் கலந்துகொண்டிருந்த போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.  

ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூறும் வகையில் சட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்றும் தற்போது நிறைவேற்று அதிகாரத்தின் பல பிரிவுகள் மாகாண சபைகளுக்கும் பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எதிர்காலத்தில் ஜனாதிபதியின், அதிகாரங்களை பாராளுமன்றத்திற்கு பகிர்ந்தளிப்பதற்கான சட்டமொன்றை நிறைவேற்றவிருப்பதாகவும் தெரிவித்தார்.  

எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதித் தேர்தலொன்று நிச்சயமாக நடத்தப்படும் என்றும், அதற்கான நிதி ஒதுக்கீடுகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.  

அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 

இங்கிலாந்து பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டத்தன் பின்னர் அதை யாரும் கேள்வி கேட்க முடியாது. அதுதான் பாராளுமன்றத்தின் உயர் அதிகாரம். பாராளுமன்றமே உச்சமானது.

அமெரிக்க அமைப்பு வேறு. அமெரிக்க அமைப்பில், அவர்கள் ஒரு சட்டத்தை உருவாக்கும் போது,  ஜனாதிபதிக்கும் நிறைவேற்று அதிகாரங்களையும், காங்கிரசுக்கும் சட்டமன்ற அதிகாரங்களையும், நீதிமன்றங்களுக்கு நீதித்துறை அதிகாரங்களையும் வழங்கினர்.

நமது நாடு சமஷ்டி முறையை பின்பற்றாததால் ஆங்கிலேய முறையை கடைபிடிக்கிறோம். இந்தியா ஒரு சமஷ்டி நாடாக இருந்ததால் சமஷ்டி முறைக்கு செல்ல வேண்டியிருந்தது. ஆனால் நாம் ஒரு சமஷ்டி நாடு அல்ல. நமது நாட்டில் சட்டம் இயற்றும் இறுதி அதிகாரம் பாராளுமன்றத்திற்கே உள்ளது

இலங்கையில் பல ஆட்சி முறைகள் இருந்தன. ஒன்று ஆங்கிலேயர் கால முறைமை மற்றையது அதன்படியே அமைச்சரவை செயற்படுகிறது. மற்றையது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை. நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதியிடம் உள்ளது. சட்டமியற்றும் அதிகாரங்கள் சட்டவாக்க சபையிடம் உள்ளது.  அதன்படி ஜனாதிபதி ஒரு கட்சியிலிருந்து தெரிவாகும் போது, சட்டவாக்க சபைக்கு மற்றொரு கட்சியிலிருந்து உறுப்பினர்கள் தெரிவாகலாம்.  சுவிட்சர்லாந்தின் பாராளுமன்ற முறையில்,  பாராளுமன்றத்தால் சமஷ்டி செயற்குழுவினால் ஏழு பேர் நியமிக்கப்படுவர். நிறைவேற்று அதிகாரம் சமஷ்டி சபையிடம் காணப்படும். 

அந்நாட்டு முறைமைக்கமைய இரண்டு பிரதான கட்சிகளுக்கும் தலா இரண்டு ஆசனங்கள் வழங்கப்படும். ஏனைய கட்சிகளுக்கு ஒரு ஆசனம் என்ற அடிப்படையில் ஒதுக்கப்படும். அவ்வாறு  நியமிக்கப்பட்டும் உறுப்பினர்கள் நிறுவனங்களை பகிர்ந்து கொள்வது தொடர்பில் கலந்தாலோசிக்க முடியும். அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டே நிறைவேற்று அதிகாரத்தையும் செயற்படுத்துவர். அமைச்சரவைக்கு அமைச்சர்களை நியமிக்கவும் நீக்கவும் பிரதமருக்கு அதிகாரம் உள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை, அந்த ஏழு பேரில் ஒருவர் தலைமைப் பொறுப்பை ஏற்பர்.

மற்றைய முறை இலங்கையில் இருந்த டொனமோர் முறை. அந்த அமைப்பில், நிர்வாக அமைப்பு ஏழு பகுதிகளாக பிரிக்கப்பட்டது. அவர்களில் ஒருவர் சபாநாயகராக செயல்பட்டார். அந்த ஏழு பேரில் ஒருவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைவர் அமைச்சராக பதவியேற்றார். அந்த அமைச்சர்களில் ஒருவர் சபைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் மூன்று செயலாளர்களை ஆளுநர் நியமித்தார். அமைச்சர்கள் குழு, பத்து பேரைக் கொண்டது. இந்த பத்து பேரில் தலைமைச் செயலாளர் தலைவராக செயல்பட்டார். இந்த நிர்வாகக்குழுக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதன் பிறகு பிரான்ஸ் முறைமை வந்தது. அதன் கீழ் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி மக்கள் வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்பட்டார். பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டனர். இந்த முறையே இலங்கையில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதில் சாதக பாதகங்கள் இரண்டுமே உள்ளன.  மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தன நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை வகித்து நாட்டுக்கு பெரும் பணி ஆற்றியுள்ளார். மகாவலி, சமனல குளம், லுணுகம்வெஹர போன்ற பாரிய திட்டங்கள் நிர்மாணிக்கப்பட்டன. கோட்டே தலைநகராக மாற்றப்பட்டது. இரண்டு வர்த்தக வலயங்கள் நிறுவப்பட்டன. இந்த அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தும் 11 வருட யுத்தத்திற்கு மத்தியில் செயற்படுத்தப்பட்டவையாகும். 

அத்துடன் மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச, சுமார் இருநூறு ஆடைத் தொழிற்சாலைகளை  ஆரம்பித்தார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை இல்லாவிட்டால் இலங்கை யுத்தத்தில் வெற்றி கிடைத்திருக்காது. இலங்கையில் நெருக்கடி ஏற்பட்டு ஆட்சி கவிழும் என வெளிநாடுகள் எதிர்பார்த்தன. ஜனாதிபதியொருவர் இருந்ததால்  அந்த அதிகாரத்தை யாராலும் பறிக்க  முடியவில்லை. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அந்த அதிகாரம் இருந்ததாலேயே அவரால் இராணுவத்தை நிலைநிறுத்தி யுத்தத்தில் வெற்றிபெற முடிந்தது.

நல்லாட்சி அரசாங்கத்தின் போது அது முறையாக பயன்படுத்தப்படவில்லை. நிறைவேற்று ஜனாதிபதி தனியாகவும், நாங்கள் தனியாகவும் செயற்பட வேண்டிய நிலைமை உருவானது. போராட்டத்தின் போது நிறைவேற்று அதிகாரம் இருந்ததாலேயே நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடிந்தது. அன்று பிரதமர் பதவியை ஏற்க யாரும் முன்வரவில்லை. அப்போது ஜனாதிபதி கப்பலில் ஏறி திருகோணமலை சென்ற போது சிலர் என்னை பிரதமர் பதவியில் இருந்து விலகச் சொன்னார்கள்.

அதன்போது, பெரும்பான்மை உள்ள ஒருவர் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும் என்றும். இல்லாவிட்டால் நான் பதவி விலக முடியாது என்றும் கூறினேன். பதவி விலகுவதற்கான கடிதத்தை எழுதினாலும் அதனை ஜனாதிபதியிடமே கையளிக்க வேண்டும். ஜனாதிபதி கப்பலில் தஞ்சம் புகுந்திருந்து காரணத்தினாலும், நாட்டை விட்டு மாலைத்தீவுக்கு சென்றதாலும் என்னால் அந்த கடிதத்தை வழங்க முடியாது.  அழுத்தங்கள் மற்றும் எனது வீட்டிற்கு தீ வைக்கப்பட்ட காரணத்தினால் நான் பதவி விலகியிருந்தால் ஜனநாயகத்திற்கு முரணாகவே எவரேனும் நாட்டை கைபற்றியிருப்பார்கள்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாகவும் அதில் வென்று ஜனாதிபதியாகப் போவதாகவும் சொல்லும் எந்நவொரு வேட்பாளரும் நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவதாக இதுவரை அறிவிக்கவில்லை. அதனால் பாராளுமன்றத்தை பலப்படுத்தும் வேலைத்திட்டத்தை தயாரிக்க வேண்டியது அவசியம்.

இப்போதும் மாகாண சபைக்கு நிறைவேற்று அதிகாரங்கள் சில வழங்கப்பட்டுள்ளன. மற்றொரு பகுதி பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இன்னும் சில சட்டங்கள் கொண்டுவரப்பட்ட பின்னர் அந்த அதிகாரம் பாராளுமன்றத்திற்கு பிரிந்துச் செல்லும்  

ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூறும் வகையில் சட்டங்களை நிறைவேற்ற வேண்டியது அவசியமாகும். புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள பொருளாதார மாற்ற சட்டத்தின் ஊடாக அடுத்த 04 வருடங்களுக்கான அரசாங்கத்தின் திட்டம் முன்வைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு வருடமும் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பான முன்னேற்றங்கள் வருட இறுதியில் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்பட வேண்டும். முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவினால் முன்மொழியப்பட்ட மக்கள் சபை முறைமை சாத்தியமான ஒன்றாகும். அதேபோல் பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்படவிருக்கும் பாலின சமத்துவச் சட்டமும் நடைமுறைக்கேற்றது என்பதைக் கூற வேண்டும்.

இங்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அளித்த பதில் வருமாறு,

கேள்வி – உங்கள் அனுபவத்தின்படி, தேசிய செயல்திட்டங்கள் தோல்வியடைந்ததற்கு என்ன காரணங்கள்?

பதில் – பல அரசாங்கங்களுக்குக் கொள்கைகள் இருக்கவில்லை. இவ்வாறுதான் நாம் எழுபத்தேழு வருடங்களை கடந்திருக்கிறோம். 2015 வரை போர் ஒரு முக்கிய பிரச்சினையாக காணப்பட்டது. சரியான கொள்கைகள் தயாரிக்கப்படவில்லை. மேலும் நமது பொருளாதார முறைமையும் மாறவில்லை. அதனாலேயே கடந்த சில வருடங்கள் நெருக்கடிக்கு முகம்கொடுக்க வேண்டியிருந்தது. யுத்தம் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 2001ல் நாட்டின் பொருளாதாரம் சரிந்தது. அப்போது சுனாமி வந்தது. யுத்தம் முடிவடைந்த போதிலும், அதன் பின்னர் எம்மிடம் எந்த திட்டமும் இல்லை.

2015ஆம் ஆண்டு பிரதமர் என்ற முறையில் நான் அது குறித்து விசேட கவனம் செலுத்தினேன். வரவுசெலவுத் திட்டத்தில் உபரியை உறுபிப்படுத்தினோம். எவ்வாறாயினும் நாம் இன்றும் இறக்குமதி சார்ந்த பொருளாதாரத்தையே கொண்டிருக்கிறோம்.

விவசாயத்திற்கான எந்த கொள்கையும் இல்லை. அநுராதபுர மன்னர் காலத்தில் இருந்து கறுவா, தேயிலை, இறப்பர், தேங்காய் போன்றவற்றை ஏற்றுமதி செய்தோம். 1948 க்குப் பிறகு நாங்கள் மகாவலி மற்றும் கல்ஓயா காணி வர்த்தகத்தை ஆரம்பித்தோம். ஆனால் விவசாயத்துக்கான கொள்கை எதுவும் தயாரிக்கப்படவில்லை. அதனால் நாட்டை கட்டியெழுப்ப விவசாயத்தை நவீனமயப்படுத்தி ஏற்றுமதி பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதை தவிர வேறு வழியில்லை என்பதையும் முன்பே கூறியிருந்தேன்.  

1977 வரை முதலீடுகள் மற்றும் சுதந்திர வர்த்தக வலயங்களைப் பெற்றுக்கொள்ள முயற்சித்தோம். அதன் பிறகு அவற்றில் ஆர்வம் காட்டவில்லை. அங்கே நமக்குப் பின்னால் இருந்த நாடுகள் நம்மைக் கடந்து முன்னேறியுள்ளன. தாய்லாந்து,மலேசியா, வியட்நாம், பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகள் முன்னேறியுள்ளன. எனவே, அதனால் எமது அரசியல் கொள்கைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது.  

கல்வித்துறையில் புதிய சீர்திருத்தங்கள் அவசியம். இளைஞர்கள் அதிக பணம் செலவழித்து வெளிநாடுகளில் பெற்றுக்கொள்ளும் பட்டத்தை உள்நாட்டில் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை உருவாக்க வேண்டும். 

செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற நவீன தொழில்நுட்பத்துடன் நாம் முன்னேற வேண்டும். 75 வருட வாழ்க்கையில் நான் பல அனுபவங்களைப் பெற்றுள்ளேன். நீங்கள் அனைவரும் Z தலைமுறையைச் சேர்ந்தவர்கள். உங்கள் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும். உலகத்துடன் போட்டிப் போடும் வகையில் வளர்ந்த நாட்டை உருவாக்க வேண்டும்.

கேள்வி – காலநிலை மாற்றம் மற்றும் அனைத்து விலங்குகளின் பாதுகாப்பு தொடர்பிலும் நீங்கள் சிறப்பு கவனம் செலுத்துவதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம். உத்தேச விலங்குகள் நல சட்டமூலம் மற்றும் அதை நிறைவேற்ற தேவையான காலம் குறித்து அறிந்துகொள்ள விரும்புகிறேன்.  

பதில் – விலங்குகள் நலச் சட்டம் தற்போது துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்படுகிறது. அதனை இந்த அமர்வில் நிறைவேற்றிக்கொள்ள முடியுமா என்பது குறித்து சொல்ல முடியாது. ஏனெனில் ஓகஸ்ட் மாதத்திற்குள் பலச் சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. எனவே மேற்கூறிய சட்டம் நிறைவேற்றப்படுவதை ஆண்டு வரை பிற்போட வேண்டியிருக்கும். பெண்களின் பாதுகாப்பிற்கான பல சட்டமூலங்களை நிறைவேற்றிக்கொள்ள முன்னுரிமை அளித்துள்ளோம்.

அதன் பிறகு, குற்றவியல் தண்டனைச் சட்டக் கோவையில் திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது.  பொருளாதார மாற்றச் சட்டத்தை கொண்டு வர வேண்டியுள்ளது. ஊழல் தடுப்புச் சட்டத்தை நாங்கள் நிறைவேற்றியுள்ளோம். குற்றச் செயல்கள் தொடர்பான சட்டமும் சமர்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு, மீதமுள்ளச் சட்டங்கள் நிறைவேற்றப்படும். இதனால் சட்டவாக்கச் சபையின் பணிச்சுமை அதிகரித்திருக்கிறது. 

விவசாயத் துறைசார் மேற்பார்வைக் குழு விலங்குகள் நலச் சட்டம் குறித்து ஆராய்கிறது. மயில்கள், காட்டுப்பன்றிகள், மான்கள் போன்றவற்றால் பயிர்கள் பெருமளவில் அழிந்து வருவதாக அவர்கள் அறிந்துள்ளனர். இந்த நிலைமையை சரிசெய்து முன்னேறிச் செல்வதற்கான வழிமுறைகள் பற்றி சிந்திக்கிறோம்.  

பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பிரேமநாத் .சி. தொலவத்த, முன்னாள் பாராளுமன்ற செயலாளர் நாயகம் கலாநிதி பிரியானி விஜேசிங்க, இளைஞர் விவகாரம் மற்றும் நிலையான அபிவிருத்திக்கான ஜனாதிபதியின் பணிப்பாளர் ரந்துல அபேவீர உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

CATEGORIES
Share This