ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும்: இந்து சம்மேளனம் கோரிக்கை

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும்: இந்து சம்மேளனம் கோரிக்கை

சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள வணக்கத்துக்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரர் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என இலங்கை இந்து சம்மேளனம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம் ஒன்றின் மூலம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஞானசார தேரரை பலர் தவறாகப் புரிந்துகொண்டுள்ளனர் எனவும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஞானசார தேரரின் ஜனநாயகக் குரலை முடக்கும் நோக்கத்துடன் அரசாங்கத்தின் சில ஜனநாயக அமைப்புகளால் அறியப்பட்ட மற்றும் அறியப்படாத கூறுகளால் அவர் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், ஞானசார தேரர் முன்னெடுத்துள்ள சேவைகளையும் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் பட்டிலிட்டுள்ளனர்.

அந்தந்த மத நம்பிக்கைகளைப் பின்பற்றுபவர்கள் மத்தியில் சமாதானத்தை நிலைநாட்டவும், நாட்டின் பொருளாதார, சமூக மற்றும் ஆன்மீகத் தளங்களை அழிக்கக்கூடிய முரண்பாடுகளை இல்லாதொழிக்கவும் ஞானசார தேரர் பாடுபட்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஞானசார தேரருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகள் தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றம் அவருக்கு நான்கு ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதித்திருந்தது.

2016ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கூரகல பள்ளிவாசல் தொடர்பில் ஞானசார தேரர் தெரிவித்த கருத்து தேசிய மற்றும் மத நல்லிணக்கத்துக்கு பங்கம் விளைவித்ததாக தெரிவித்து இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.

CATEGORIES
Share This