EPAPER
மல்கம் ரஞ்சித் உண்மைகளை முற்றாக மறைக்கின்றார்; கடுமையாகச் சாடும் கோட்டா

மல்கம் ரஞ்சித் உண்மைகளை முற்றாக மறைக்கின்றார்; கடுமையாகச் சாடும் கோட்டா

பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் முன்வைத்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவரை கடுமையாக சாடியுள்ளார்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான, கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரித்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட இரு தரப்புகள் குறித்த உண்மைகளை கர்தினால் மறைக்கின்றார் அல்லது வெளிப்படையாக தவிர்க்கின்றார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை என்னிடம் கையளிக்கப்பட்ட மறுநாள், நான் கர்தினால் மல்கம் ரஞ்சித்தை தொடர்பு கொண்டேன் என கர்தினால் தெரிவித்துள்ளார். ஆனால் நான் அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் கர்தினாலை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளவேயில்லை என கோட்டாபய தெரிவித்துள்ளார்.

முஸ்லீம் சமூகத்தினர் எனக்கு வாக்களிக்கவில்லை. என்னை ஆதரிக்கவில்லை, என்பது நன்கு தெரிந்த விடயம். இதன் காரணமாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தடை செய்யப்பட வேண்டிய எந்த அமைப்பிலும் நான் ஏன் ஆதரவாளர்களை வைத்திருக்கவேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

2021 ம் ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதி ஜனாதிபதி ஆணைக் குழுவின் அறிக்கை என்னிடம் கையளிக்கப்பட்டது. நான் அதனை ஆராய்ந்த பின்னர் சட்டமா அதிபரிடம் பாரப்படுத்தினேன். 2021 பெப்ரவரி 23ஆம் திகதி அது பாராளுமன்ற சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது. மார்ச் முதலாம் திகதி அதன் பிரதிகள் பௌத்த குருமார், கர்தினால் மற்றும் கத்தோலிக்க ஆயர்களிற்கு கையளிக்கப்பட்டது எனவும் கோட்டாபய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையை சமர்ப்பித்ததும் ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்காக நான் ஆறுபேர் கொண்ட அமைச்சரவை உபகுழுவை நியமித்தேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ்மா அதிபரின் பரிந்துரையின் கீழ் சிஐடியின் அப்போதைய இயக்குநர், 2019 நவம்பர் மாதம் பொலிஸ் ஆணைக் குழுவால் பதவி மாற்றம் செய்யப்பட்டார். இந்த பொலிஸ் ஆணைக்குழு 19 ஆவது திருத்தத்தின் கீழ் முன்னைய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டது என தெரிவித்துள்ள கோட்டபாய ராஜபக்ச, உயர்நீதிமன்ற வழக்கு தொடர்பில் நீதிபதிகளை செல்வாக்கிற்கு உட்படுத்துவது தொடர்பில் ரஞ்சன் ராமநாயக்கவுடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடல்களை கசிந்தமை தொடர்பிலான விசாரணைகள் தொடர்பில் பொலிஸ் ஆணைக்குழு இந்த சிஐடி அதிகாரியை சில வாரங்களின் பின்னர் பணியிலிருந்து இடைநிறுத்தியது எனவும் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதற்கு சில மாதங்களின் பின்னர் முன்னாள் பொலிஸ் அதிகாரியொருவருக்கு எதிரான குற்றவியல் சம்பவமொன்று தொடர்பில் பொய்யான ஆதாரங்களை உருவாக்கியமை தொடர்பிலான விசாரணையின் பின்னர் இந்த சிஐடி அதிகாரி நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார் எனத் தெரிவித்துள்ள கோட்டாபய ராஜபக்ச, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை சீர்குலைப்பதற்காக இந்த அதிகாரியை நானே பதவி நீக்கம் செய்தேன் என தெரிவிக்கப்படுவதை மறுத்துள்ளார்.

இந்த குறிப்பிட்ட சிஐடி அதிகாரி 2017 இல் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று பல மாதங்களின் பின்னரும் அவர் தொடர்ந்து பதவியிலிருந்தார் எனக் குறிப்பிட்டுள்ள கோட்டபாய, உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு முந்தைய காலப் பகுதியில் வவுணதீவு விவகாரம் தொடர்பில் சிஐடியினரே விசாரணைகளை மேற்கொண்டனர், மாவனெல்லயில் புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்டமை வனாத்தவில்லில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பிலும் சிஐடியினரே விசாரணைகளை மேற்கொண்டனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்ட குழுவினரும் நபர்களுமே தொடர்புபட்டிருந்தனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சட்ட அமுலாக்கல் தரப்பினர் மேலும் எச்சரிக்கையுடன் இருந்திருந்தால் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலிற்கு முன்னரே சஹ்ரான் குழுவினரை கைதுசெய்திருக்கலாம் என ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது என குறிப்பிட்டுள்ள கோட்டாபய ராஜபக்ச, இந்தத் தாக்குதலை தடுக்கத் தவறியது சிஐடி இயக்குநரின் தவறே எனவும் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்டவர்களை நீதியின் முன் நிறுத்தவில்லை என கர்தினால் தனது உரையில் குற்றம் சாட்டியுள்ளார், எனினும் குற்றவாளிகளை அரசியல்வாதிகளால் நீதியின் முன் நிறுத்தமுடியாது, பொலிஸாரினாலேயே அதனை செய்ய முடியும் என குறிப்பிட்டுள்ள கோட்டாபய ராஜபக்ச, சட்டமா அதிபர் திணைக்களமும் நீதிக் கட்டமைப்பும் இணைந்து இதனை முன்னெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை இஸ்லாமிய தீவிரவாதிகளே முன்னெடுத்தனர். புலனாய்வு விசாரணைகளில் மிக முக்கிய அமைப்பான சிஐடி இந்தத் தாக்குதலிற்கு பல மாதங்கள் முன்னராகவே இந்தத் தாக்குதலை மேற்கொண்டவர்கள் மற்றும் அமைப்பு குறித்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது.ஆனால் அவர்கள் தாக்குதலை மேற்கொள்வதற்கு முன்னர் அவர்களை கண்டுபிடிக்கத் தவறிவிட்டது எனவும் கோட்டபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This