ரணில் -மகிந்த இணைவு உறுதி

ரணில் -மகிந்த இணைவு உறுதி

மே தினத்திற்குப் பிறகு பரந்த அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கான முதல் நடவடிக்கையாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர் பசில் ராஜபக்ஷ மற்றும் ஏனைய கட்சிகள் மற்றும் குழுக்களின் பிரதிநிதிகளை சந்தித்து, ஜனாதிபதித் தேர்தலைக் கருத்தில் கொண்டு அரசியல் பணிகளை விரைவுபடுத்தத் தீர்மானித்துள்ளார்.

இந்தச் சந்திப்பில் மக்கள் ஐக்கிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதமர் தினேஷ் குணவர்தன கலந்துகொண்டார்.

மேலும், அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, திரான் அலஸ், ஹரின் பெர்னாண்டோ, காஞ்சன விஜேசேகர, பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோர் செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாதிபதி பணிமனையின் பிரதானி சாகல ரத்நாயக்கவும் கலந்து கொண்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஜனாதிபதியின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் தனித்தனியாக மே தினப் பேரணிகளை நடத்துவதற்கும் அதன் பின்னர் ஜனாதிபதித் தேர்தலைக் கருத்தில் கொண்டு ஒத்த கருத்துடைய ஏனைய கட்சிகளுடன் இணைந்து ஒரு கூட்டணியை உருவாக்கவும் தீர்மானித்துள்ளன.

உத்தேச கூட்டணியின் சின்னத்தில் ஜனாதிபதி இம்முறை பொது வேட்பாளராக தேர்தலில் போட்டியிடுவார்.

மேலும் “ஜனாதிபதி ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னத்தில் போட்டியிடமாட்டார்” என்று ஒரு வட்டாரம் தெரிவித்தது.

அனைத்து கட்சிகளும் குழுக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சின்னத்தில் புதிய கூட்டணியை பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன மற்றும் அமைச்சர் ட்ரான் அலஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், ஜூன் மாதம் சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது தவணையை பெற்ற பிறகு, தேர்தலை இலக்காகக் கொண்டு ஜனாதிபதி பிரசாரத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக மேற்படி அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.

புதிய கூட்டணியை உருவாக்குவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, டலஸ் அழகப்பெரும மற்றும் பிவித்துரு ஹெல உறுமய தலைமையிலான அரசியல் குழுக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து விலகிய மேற்படி கட்சிகள் மற்றும் குழுக்களை புதிய கூட்டணியில் இணைத்துக் கொள்வதற்காக அணுகுவதெனவும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பசில் ராஜபக்ஷ வுக்குமிடையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

CATEGORIES
Share This