தமிழகத்தின் சுயமரியாதைக்கு பதில் சொல்லுமா இந்திய தேர்தல்?: திராவிடக் கட்சிகளுக்கு எதிரான மனநிலையும் டில்லியின் எதிர்காலமும்

தமிழகத்தின் சுயமரியாதைக்கு பதில் சொல்லுமா இந்திய தேர்தல்?: திராவிடக் கட்சிகளுக்கு எதிரான மனநிலையும் டில்லியின் எதிர்காலமும்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நாளைமறுதினம் 19ஆம் திகதி தொடங்கி ஜுன் மாதம் 1ஆம் திகதிவரை நடைபெற உள்ளது.

மக்களவை என அழைக்கப்படும் பாராளுமன்றத்தின் கீழ் அவையில் 543 இடங்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும்.

ஏழு கட்டங்களாக தேர்தல்

ஆட்சியமைக்க, ஒரு கட்சி அல்லது கூட்டணிக்கு 272 இடங்கள் தேவை. பிரதமர் நரேந்திர மோடியின் பாரதீய ஜனதா கட்சி (BJP) கடந்த முறை 303 இடங்களையும், முக்கிய எதிர்க்கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ் (INC) 52 இடங்களையும் வென்றது.

2019 பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் மூன்றாவது பெரிய கட்சியாக இந்தியாவில் உருவெடுத்தது.

ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25 மற்றும் ஜூன் 1 ஆகிய திகதிகளில் வாக்குப்பதிவு இடம்பெறும் என்பதுடன், ஜூன் 4 ஆம் திகதி வாக்குகள் எண்ணப்படும்.

தமிழகத்தில் நாளைமறுதினம் வாக்குப் பதிவு

மொத்தம் 968 மில்லியன் வாக்காளர்கள் இம்முறை வாக்களிக்க பதிவு செய்துள்ளனர். அவர்களில் 497 மில்லியன் ஆண்கள் மற்றும் 471 மில்லியன் பெண்கள்.

ஆண்களை விட அதிக சதவீத பெண் வாக்காளர்கள் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக வாக்களிக்க வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் நாளைமறுதினம் வாக்குப் பதிவு இடம்பெற உள்ளது. தமிழகத்தில் இம்முறை திமுக, காங்கிரஸ் கூட்டணி, அதிகமு கூட்டணி, பாஜக தலைமையிலானக் கூட்டணி ஆகிய மூன்று பிரதானக் கூட்டணிகளும் நாம் தமிழர் கட்சி தனித்தும் தேர்தலில் களமிறங்கியுள்ளன.

அதிமுக கூட்டணிக்கு வாக்கு சரிவு

கடந்த முறை தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 38 தொகுதிகளை திமுக கூட்டணி கைப்பற்றியது. இம்முறையும் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெற வாய்ப்பு உள்ளதாக சில கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் பெரும்பான்மையான ஊடகங்கள் திமுகவின் உறவினர்களால் வழிநடத்தப்படுவதல் இவை கருத்துக் கணிப்பு என்ற பேரில் மக்கள் மனதில் கருத்து திணிப்பை மேற்கொள்வதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதிமுக கூட்டணி இம்முறை கடுமையான வாக்கு சரிவை சந்திக்கும் என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியு்ளளனர். பாஜகவின் செல்வாக்கு இம்முறை தமிழகத்தில் ஓரளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெரியார், அண்ணா கால கருத்தியல்

குறிப்பாக அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை கோவையில் வெற்றிபெற வாய்ப்புள்ளதாக அக்கட்சியினர் நம்பிக்கை வெளியிட்டு வருகின்றனர். என்றாலும், பாஜகவுக்கு எதிரான மனநிலை என்பது பல ஆண்டுகளாக தமிழகத்தில் தொடர்கிறது.

இந்தியாவில் மதவாத்தை முன்னிறுத்தி ஆளும் கட்சியாக பாஜக உள்ளது. தமிழகத்தை பொறுத்தமட்டில் சமூக நீதி தொடர்பான கருத்தியல் வலுவாக உள்ளது. பெரியார், அண்ணா காலம் முதல் இந்த கருத்தியல் வலுவாக உள்ளது. இதனால் பாஜகவின் கருத்தியல் தமிழகத்தில் இதுவரை எடுபடவில்லை.

காங்கிரஸ் கட்சி இந்தியாவின் பன்மைத்துவத்தை தொடர்ந்து வலியுறுத்துகிறது. பல்வேறு தேசிய இனங்களின் ஒற்றுமையில்தான் இந்தியா கட்டியெழுப்பப்பட்டுள்ளது என்பதும் காங்கிரஸின் நிலைப்பாடு. மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டது முதல் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஓரளவு ஆதரவு உள்ளது.

காங்கிரஸுக்கு எதிரான மனநிலை

என்றாலும், ஈழத்தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை காங்கிரஸ் கொண்டிருந்ததால் இலங்கையில் நடைபெற்ற போரில் இலங்கை அரசாங்கத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டில் செயல்பட்டது.

2009ஆம் ஆண்டுக்கு பின்னர் காங்கிரஸுக்கு எதிரான மனநிலை என்பது தமிழகத்தில் அதிகரித்துள்ளது. குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் அரசியல் வருகையின் பின்னர் காங்கிரஸுக்கு எதிராக கருத்துகள் வலுப்பெற்றுள்ளன.

அதேபோன்று திராவிட கருத்தியலுக்கு எதிரான சிந்தனைகளும் தமிழகத்தில் வலுவடைந்து வருகின்றன. தமிழர்களை திராவிடர்களாக சித்தரித்தே திமுக ஆண்டு வருவதாக தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் கூறுகின்றனர்.

திராட கருத்தியலுக்கு எதிரான சிந்தனைகள்

திராவிடம் என்ற கருத்தியல் பிறமொழியாளர்கள் தமிழகத்தை ஆட்சி செய்ய கையில் எடுத்த ஆயுதம் என கூறும் தமிழ்த் தேசியவாதிகள், இவர்களது ஆட்சியில் தமிழக மக்கள் தமிழர் என்ற உணர்வை இழந்துள்ளதாகவும் கூறுகின்றனர்.

திராவிட அரசியலுக்கு எதிராக 1960களில் சி.ப.ஆதித்தனார் எடுத்த அரசியல் நிலைப்பாடுகள் தொடர்ச்சியாக பின்பற்றப்பட்டிருந்தால் திராவிட கருத்தியலுக்கு எதிரான சிந்தனைகள் அன்றே தமிழகத்தில் வலுப்பெற்றிருக்கும் எனவும் தமிழ்த் தேசியவாதிகள் கூறுகின்றனர்.

கடந்த பொதுத் தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி, 30 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றது. இம்முறை அக்கட்சி 50 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை தடுக்கும் நோக்கிலேயே அக்கட்சியின் விவசாய சின்னம் பறிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி

ஆனால், நாம் தமிழர் கட்சிக்கான ஆதரவு வளையம் கணிசமாக அதிகரித்துள்ளது. இதனை தமிழகத்தின் பிரதான ஊடகங்களின் கருத்துக் கணிப்புகளும் வெளிப்படுத்தியுள்ளன.

இதேவேளை, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவின் பின்னர் அதிமுக கடுமையான வீழ்ச்சியை நோக்கி நகர்ந்து வருகிறது. கட்சிக்குள் ஏற்பட்டுள்ள தலைமைத்துவ போட்டிகள் அக்கட்சியை வலுவிழக்கச் செய்துள்ளது.

இந்த நிலையிலேயே பரபரப்பாக இடம்பெற்றுவந்த தேர்தல் பிரசாங்கள் இன்று மாலையுடன் முடிவுக்கு வரவுள்ளன. தமிழகத்தை பொறுத்தமட்டில் இம்முறையும் திமுக கூட்டணியே அதிக இடங்களில் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

CATEGORIES
Share This