யாழ். போதனா வைத்தியசாலையில் பத்து மாடியில் புதிய கட்டடம்!

யாழ். போதனா வைத்தியசாலையில் பத்து மாடியில் புதிய கட்டடம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 10 மாடியுடைய புதிய கட்டடம் ஒன்றை அமைப்பதற்கான முன்னாயத்த ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை (29) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற வைத்தியசாலையின் அபிவிருத்தி குழு கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தினமும் அதிகளவிலான நோயாளிகள் பல்வேறு நோய்களுக்கான சிகிச்சை பெற்று வரும் நிலையில் விடுதிகளிலும் அதிகளவானோர் தாங்கி நின்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால், இட நெருக்கடி காரணமாக 10 மாடியில் புதிய கட்டடம் ஒன்றை அமைப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

புதிய கட்டடத்தை அமைப்பதற்கான வரைபடம் தயாரிக்கப்பட்ட நிலையில் அடுத்த கூட்டத்தில் அதனை சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்க்கிறேன்.

புதிய கட்டடத்தை கட்டுவதற்கு பாரிய நிதி செலவு செய்யவேண்டிய சூழ்நிலையில் எமது புலம்பெயர் வர்த்தகரான ராஜ் ராயரட்ணம் ஒரு தளத்துக்கான முழுமையான செலவை வழங்குவதற்கான சாதகமான பதிலை வழங்கியுள்ள நிலையில் அவரைப் போன்று பலர் உதவி வழங்குவார்கள்.

அரசாங்கத்திடம் புதிய கட்டடத்துக்கு தேவையான இயந்திரங்களை கொள்வனவு செய்வதற்கு வரிவிலக்கை கோரி பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளையும் சம்பந்தப்பட்டவர்களிடம் கலந்துரையாடியுள்ளோம்.

ஒரே தடவையில் பத்து மாடிகளையும் கட்டி முடிக்காவிடினும் ஆகக் குறைந்தது ஐந்து தொடக்கம் ஆறு மாடிகளையாவது கட்டி முடித்தால் இட நெருக்கடி குறைந்துவிடும்.

ஆகவே, புதிய கட்டடத்துக்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் என அவர் தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்துகொண்டார்.

CATEGORIES
TAGS
Share This