சாந்தனின் புகழுடலுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி!
சாந்தனின் உடலுக்கு அவரது இல்லத்தில் சிவகுரு ஆதீன குரு முதல்வர் வேலன் சுவாமிகள் மற்றும் கிறிஸ்தவ மதகுருமார்களால் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதேவேளை சாந்தனுக்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இலங்கை தமிழரசு கட்சியின் சாம்பல்தீவு கிளை ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்டம் ஆத்திமோட்டை பகுதியில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வானது, நேற்று (03) மாலை 5.00 மணியளில் நடைபெற்றுள்ளது.
இந்த அஞ்சலி நிகழ்வில், மாவட்ட கிளையின் பொருளாளர் வெள்ளத்தம்பி சுரேஷ் மற்றும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் முருகதாஸ், ஆதரவாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர். மறைந்த தில்லையம்பலம் சுதேந்திரராஜாவின் (சாந்தன்) புகழுடல் தற்போது அவரது உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு அஞ்சலிக்காக யாழ். வல்வெட்டித்துறையில் உள்ள அவரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், அவரது புகழுடலுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தாய் நாட்டிற்கு சென்று அம்மாவின் கையில் ஒருவேளை உணவினை சாப்பிட வேண்டும் என்ற ஆசையில் இருந்த சாந்தன் இலங்கைக்கு அனுப்புவதற்கான உத்தரவினை பெற்று கடவுச்சீட்டை பெற்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்திய – இலங்கை அரசுகளது கூட்டு சதியால் காவு கொள்ளப்பட்ட சாந்தனின் புகழுடல் அவன் நேசித்த மண்ணிற்கு வந்திருக்கின்றது.
சாந்தனின் புகழுடல் தற்போது தனது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
33 வருட சிறைதண்டனையை அனுபவித்து விட்டு விடுதலையாகி தாயின் 33 வருட கனவை நினைவாக்க தாயகம் திரும்ப தயாரான நிலையில் தாயினது எதிர்ப்பார்ப்புகளை சீர்குலைக்கும் விதமாக சாந்தனின் மரணம் நிகழ்ந்துள்ளது.