கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா பற்றிய அறிவிப்பு!

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா பற்றிய அறிவிப்பு!

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவானது இந்த வருடம் யாழ்ப்பாண மாவட்டச் செயலாளரின் ஒருங்கிணைப்பின் கீழ் யாழ் ஆயர் இல்லம், இலங்கை கடற்படை, நெடுந்தீவு பிரதேச செயலகம், மற்றும் சம்பந்தப்பட்ட சகல திணைக்களங்களினது முழுமையான ஒத்துழைப்புடன் பெப்ரவரி 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் மேற்படி விடயம் சார்பாக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தால் முக்கிய விடயங்கள் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2024.02.23 ஆந் திகதி காலை 5 மணி தொடக்கம் மு.ப 10 மணி வரை அரச பேரூந்துகள் மற்றும் தனியார் பேரூந்துகள் யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்திலிருந்து குறிக்கட்டுவான் வரை சேவையில் ஈடுபடும்.

மேலும் கச்சதீவுக்கான படகுச்சேவையானது குறிக்கட்டுவான்,நயினாதீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய இறங்குதுறைகளில் இருந்து 2024.02.23 ம் திகதி காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை சேவையில் ஈடுபடுத்தப்படும்.

குறிக்கட்டுவான், நயினாதீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய இறங்குதுறைகளில் இருந்து பயணிக்கும் ஒரு நபருக்கான படகிற்குரிய ஒரு வழிப் பயணக் கட்டணம் ரூ.1500 ஆகும்.

வெளி மாவட்டங்களிலிருந்து தமது சொந்தப்படகுகளில் திருவிழாவிற்கு செல்வோர் தமது வசிப்பிடங்களிற்கு அருகிலுள்ள கடற்படை முகாம்களில் தொடர்புகொண்டு உரிய கடற்பயணப் பாதுகாப்பு அனுமதியினை பெற்றுக்கொள்ளவேண்டும்.

படகுகளில் பயணம் செய்பவர்கள் தனித்தனிப் படகாக பயணம் செய்யாது குழுவாக இணைந்து பாதுகாப்பான முறையில் பயணிப்பதுடன் 23 ம் திகதி பிற்பகல் 6 மணிக்கு முன்னதாக கச்சதீவை வந்தடைவதற்கேற்றவாறு தங்களது பயணங்களை ஆரம்பிக்கவேண்டும். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This