சுதந்திர தினமானது ஈழத் தமிழரின் சுயநிர்ணய உரிமையை தாரை வார்த்த தினம்!

சுதந்திர தினமானது ஈழத் தமிழரின் சுயநிர்ணய உரிமையை தாரை வார்த்த தினம்!

இலங்கையின் சுதந்திர தினமானது ஈழத் தமிழரின் சுயநிர்ணய உரிமையை சிங்களவர்களிடம் தாரை வார்த்த தினம் என ரெலோவின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளரும், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்தள்ளார்.

இது தொடர்பில் இன்றையதினம் வெளியிட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“பெப்ரவரி 4ஆம் திகதி எனப்படுவது ஈழத் தமிழர்களை பொறுத்த வரையில் தங்களது சுயநிர்ணய உரிமையை பிரித்தானியர்கள் பறித்து சிங்களவர்களுக்கு தாரை வார்த்த தினமாகும்.

அத்துடன் தங்களின் சுதந்திரம் பறிபோன கரி நாளாகவும் பிரகடனப்படுத்தியுள்ளனர்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பிரித்தானிய காலணித்துவம் இலங்கைக்கு வருகை தந்த போது இரண்டு தேசங்களில் சிங்களவர்களும் தமிழர்களும் தனித்தனியாக தங்களது சுயநிர்ணய உரிமையுடன் தன்னாட்சியை நடாத்தி கௌரவமாக வாழ்ந்தனர்.

ஆனால், 1815ஆம் ஆண்டு கண்டி இராச்சியத்தை பிரித்தானியர் கைப்பற்றிய பின்னர் பல ராச்சியங்களாக இருந்த நாட்டை ஒற்றையாட்சி அரசியலமைப்பான கோல்புறுக் யாப்பை 1833இல் நடைமுறைக்கு கொண்டு வந்து ஒற்றையாட்சி நாடாக பிரகடனப்படுத்தினர்.

கோல்புறுக் யாப்பில் இருந்து சோல்பரி அரசியலமைப்பு வரை ஒற்றையாட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்திய பிரித்தானியர் சுதந்திரம் என்ற பெயரில் பல இன மக்கள் வாழும் நாட்டை தங்களுடைய பூகோள நலனுக்காக ஒற்றையாட்சி முறைக்குள் கொண்டு வந்தனர்.இதன்படி ஒரு இனத்திடம் ஆட்சியை ஒப்படைத்தமை ஏனைய இனங்கள் அடக்குமுறைக்கு உள்ளாவதற்கு வழி கோலியது.

இதனால் தமது இறைமையை இழந்த இனமாக ஈழத் தமிழர்கள் மாறியதுடன் சுதந்திரத்தை பறி கொடுத்தவர்களாகவும் அவலப்படுகின்றனர்.

எனவே, தமிழர்களுக்கு பெப்ரவரி 4 சுதந்திர தினம் என்பது ஒரு கரி நாளாகவே அமைந்து விட்டது” என்றுள்ளது.

CATEGORIES
TAGS
Share This