அமெரிக்க பல்கலைக்கழக வளாகத்தில் இந்திய மாணவர் சடலமாக மீட்பு!

அமெரிக்க பல்கலைக்கழக வளாகத்தில் இந்திய மாணவர் சடலமாக மீட்பு!

அமெரிக்காவில் பர்டூர் பல்கலைகழகத்தில் படித்து வந்த இந்திய மாணவர் ஒருவர், பல்கலை. வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். மகனைக் காணவில்லை என அவரது தாயார் தெரிவித்த அடுத்த நாளில் இந்தச் சோகம் நிகழ்ந்துள்ளது.

இதுகுறித்து காவல் அதிகாரிகள் கூறுகையில், “அலிசன் சாலையில் இறந்த ஒருவரின் உடல் இருப்பதாக எங்களுக்குத் தகவல் வந்தது. அங்கு சென்று பார்த்ததில் பர்டூர் பல்கலைக்கழக வளாகத்தில் இறந்து கிடந்தது கல்லூரி மாணவர் என்பது தெரியவந்தது. அம்மாணவர், நீல் ஆச்சாரியா என்பதும் தெரிய வந்தது. அவர் பர்டூர் பல்கலைக்கழகத்தின் ஜான் மார்டின்சன் கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் தகவல் (டேட்டா) அறிவியல் படித்து வந்துள்ளார்” என்றனர்.

முன்னதாக, நீலின் தாயார் கவுரி ஆச்சாரியா தனது மகனைக் காணவில்லை, அவரைக் கண்டுபிடிக்க உதவுங்கள் என்று சமூக வலைதளத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார். தனது எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “எங்களுடைய மகன் நீல் ஆச்சாரியாவை நேற்று (28) முதல் காணவில்லை. அவர் அமெரிக்காவில் உள்ள பர்டூர் பல்கலைகழகத்தில் படித்து வருகிறார். எனது மகனை பல்கலை. வளாகத்தில் இறக்கி விட்ட உபர் கார் ஓட்டுநரே அவரை கடைசியாக பார்த்துள்ளார். மகனைப் பற்றிய தகவல் ஏதும் தெரியாமல் தவித்து வருகிறோம். தயவு செய்து எங்களுக்கு உதவுங்கள்” என்று தெரிவித்திருந்தார்.

கவுரி ஆச்சாரியாவின் பதிவுக்கு சிக்காகோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் சமூக வலைதளத்தில், “பர்டூர் பல்கலைக்கழகத்தின் அதிகாரிகளுடனும், மாணவர் நீலின் குடும்பத்தினருடனும் நாங்கள் தொடர்பில் உள்ளோம். சாத்தியமான அனைத்து ஆதரவு மற்றும் உதவிகளை வழங்குவோம்” என்று தெரிவித்திருந்தது.

இதனிடையே, பல்கலைக்கழகத்தின் செய்தித் தொடர்பு துறை, நீல் ஆச்சாரியாவின் மரணம் குறித்து மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார் என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக கடந்த வாரத்தில் மவிவேக் சைனிக் என்ற இந்திய மாணவர், அமெரிக்காவின் ஜார்ஜியாவிலுள்ள லித்தோனியாவில் உள்ள கடையின் உள்ளே வைத்து மர்ம நபரால் சுத்தியலால் பல முறை தாக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார். இந்த கொலை குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.

வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் துரிதமாக செயல்பட்ட போலீஸ் அதிகாரிகள், அந்த மர்ம நபரை உடனடியாக கைது செய்தனர் என்றார். விவேக் சைனிக்-ன் உடல் இந்தியாவில் உள்ள அவரது உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த சோகம் விலகுவதற்குள் மற்றொரு இந்திய மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது அச்சத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This