ஈரான் புரட்சிப் படைகள் முகாம்கள் மீது தாக்குதல்: உறுதிப்படுத்திய பாகிஸ்தான் உளவு அதிகாரி!

ஈரான் புரட்சிப் படைகள் முகாம்கள் மீது தாக்குதல்: உறுதிப்படுத்திய பாகிஸ்தான் உளவு அதிகாரி!

ஈரானின் புரட்சிப் படைகள் முகாம்களை குறிவைத்து துல்லியத் தாக்குதல் நடத்தியுள்ளதாக பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனை நேரடியாக உறுதிப்படுத்தாத ஈரான், பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் பல்வேறு குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் மீது ஈரான் தாக்குதல் நடத்திய அடுத்த நாளே இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. முன்னதாக ஈரான் தாக்குதல் ஒரு தற்காப்பு நடவடிக்கை என்று இந்தியா ஆதரவு தெரிவித்திருந்தது கவனிக்கத்தக்கது.

ஈரான் மீதான தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் உளவு அதிகாரி, “நாங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக ஈரான் மண்ணில் இருந்து இயங்கும் ஆயுதக் குழுக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளோம் என்பதை மட்டுமே இப்போதைக்கு உறுதி செய்ய முடியும். மேலதிக விவரங்களுடன் அரசு அதிகாரபூர்வ அறிக்கையை வெளியிடும்” என்றார்.

முன்னதாக நேற்று முன்தினம் இரவு, ஈரான் – பாகிஸ்தான் எல்லையில் பலுசிஸ்தான் பகுதியில் உள்ள சன்னி தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் அல்-தும் முகாம்கள் மீது ஈரான் ராணுவம் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் 2 குழந்தைகள் உயிரிழந்தனர் 3 பேர் காயம் அடைந்தனர்.

ஏற்கெனவே மேற்கு ஆசியப் பிராந்தியத்தில், இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் பாகிஸ்தான் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டுள்ளது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. அண்மையில் ஈராக், சிரியா மீது ஈரான் தாக்குதல் மேற்கொண்டிருந்தது. இந்தச் சூழலில் பாகிஸ்தானை இப்போது தாக்கியுள்ளது.

முன்னதாக, இம்மாத தொடக்கத்தில் ஈரானில் நடந்த காசிம் சுலைமானி நினைவேந்தல் நிகழ்வில் நடந்த குண்டு வெடிப்பில் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. இதற்குப் பதிலடியாக ஈரான் அண்டை நாடுகளில் உள்ள தங்களுக்கு எதிரான பயங்கரவாத அமைப்புகளை, உளவு அமைப்புகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்துவதாகக் கூறி தாக்கி வருகிறது. இதனால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This