

வங்காளத்தில் பா.ஜனதா பிரமுகர் சுட்டுக்கொலை!
மேற்கு வங்காள மாநிலம் துர்காபூரை சேர்ந்தவர் ராஜூஜா. பா.ஜனதா பிரமுகர். தொழில் அதிபராகவும் இருந்தார். இவர் தனது நண்பர்கள் 2 பேருடன் துர்காபூரில் இருந்து கொல்கத்தா நோக்கி காரில் சென்று கொண்டு இருந்தார்.
பர்தமான் மாவட்டம் சக்திகர் பகுதியில் அவர்களின் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள ஒரு கடைக்கு அருகே நின்று கொண்டிருந்த மர்ம நபர்கள் திடீரென்று ராஜூஜா சென்ற காரை வழிமறித்தனர். உடனே கார் நிறுத்தப்பட்டது. உடனடியாக மர்ம நபர்கள் காரில் இருந்த ராஜூஜாவை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் ராஜூஜா பலத்த காயம் அடைந்தார்.
மேலும் துப்பாக்கி சூட்டில் அவரது நண்பர்களுக்கும் காயம் ஏற்பட்டது. உயிருக்கு போராடிய ராஜூஜா மற்றும் அவரது நண்பர்களை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது ராஜூஜாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். காயம் அடைந்த அவரது நண்பர்கள் 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.