சிங்கள பேரினவாதத்தை மேலும் வேரூன்ற செய்வதற்கான ஏற்பாடே பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்!

சிங்கள பேரினவாதத்தை மேலும் வேரூன்ற செய்வதற்கான ஏற்பாடே பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்!

அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமானது பயங்கரவாத தடை சட்டத்தை காட்டிலும் பல மடங்குகள் கொடூரமானது என்றும் அதன் மூலம் சிங்கள பேரினவாதம் மென்மேலும் கட்டியெப்பப்படும் எனவும் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் பற்றியும் அச் சட்டத்தை நீக்கிவிட்டு புதிதாகக் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பாகவும் விளக்கங்கள் தொடர்பான கலந்துரையாடல் இன்றைய தினம் (1) யாழ்ப்பாணம் ஞானம்ஸ் விடுதியில் இடம்பெற்றது.

கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து அவர் குறிப்பிடுகையில்,

அரசாங்கம் முன்வைத்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் என்பது தற்பொழுதுள்ள பயங்கரவாத சட்டத்தை காட்டிலும் பன்மடங்கு மோசமானது.

அதில் இராணுவத்தினருக்கு பொலிஸின் அதிகாரங்கள் கொடுக்கப்பட்டு அவர்கள் ஒருவரை கைது செய்தல், தடுத்து வைத்தல், சோதனை செய்தல் மற்றும் DIG இனால் தடுப்பு ஆணைகள் கொடுக்கப்பட்டு தடுத்து வைக்கப்படலாம்.

அது மட்டுமன்றி இந்த சட்டம் ஜனாதிபதிக்கும் பல அதிகாரங்களை வழங்கும் விதமாக உள்ளதுடன் ஜனாதிபதி குறித்த சட்ட அதிகாரத்தின் பிரகாரம் ஒரு குழுவினையோ அல்லது அமைப்பினையோ தடை செய்யப்பட்ட குழுவாக பிரகடனம் செய்தல், ஒரு இடத்தை தடை செய்யப்பட்ட இடமாக பிரகடனம் செய்தல் போன்றவற்றை மேற்கொள்ள வாய்ப்புக்கள் உள்ளன.

மற்றும் நிதி துறையில் ஈடுபாடோ அல்லது மேற்பார்வைகளோ காணப்பட மாட்டாது என்பதுடன் அரசியல் அமைப்பினால் எமக்கு அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறும் சட்டமாகவே காணப்படுகின்றது.

ராஜபக்சர்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் சிங்கள, பௌத்த பேரினவாதங்கள் இராணுவ மயமாக்கல், இராணுவ உதவியுடனான தொல்பொருள் திணைக்களம் மற்றும் வனவள பாதுகாப்பு திணைக்களம் ஆகிய மூன்று விதங்களில் முன்னெடுக்கப்பட்டது.

அவை முன்னரும் ஒன்றிணைந்து வடக்கு கிழக்கில் உள்ள அநேகமான இடங்களை தொல்பொருள் ஆராச்சிக்கு உட்படுத்துவதாக தமக்கு கீழ் எடுத்து கொள்ளுதல், மேலும் வடக்கு கிழக்கு மக்கள் விவசாயம் செய்யும் காணிகளை வனப்பாதுகாப்பு திணைக்களம் ஆக்கிரமித்தல் போன்ற செயற்பாடுகளிற்கு இராணுவம் பக்கபலமாக உள்ளது.

இங்குள்ள மக்களின் காணிகள், கலாசாரங்கள், உரிமைகள் போன்றவற்றை பதிப்பதாகவும் சிங்கள பேரினவாதத்தினை மேலும் வேரூன்ற செய்வதற்கான செயற்பாடாகவே உள்ளது. எனவும் தெரிவித்தார்.

CATEGORIES
Share This