பெரும்பான்மையின அதிகாரிக்கு சேவை நீடிப்பு வழங்கினால் மாகாண சபையை முடங்கிப் போராடுவோம்

பெரும்பான்மையின அதிகாரிக்கு சேவை நீடிப்பு வழங்கினால் மாகாண சபையை முடங்கிப் போராடுவோம்


வடமாகாண இறைவரித் திணைக்களத்திற்கு ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள பெரும்பான்மையின உயரதிகாரிக்கு சேவைநீடிப்பு வழங்கினால்,வடமாகாண சபையை முடக்கிப் போராடப் போவதாக,தமிழ் மக்கள் பண்பாட்டு பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுவீகரன் நிஷாந்தன் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே,அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் தெரிவித்த போது
வட மாகாணசபையில் தகுதியுள்ள தமிழ் அதிகாரிகள் பலர் இருக்கும் நிலையில், பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் வடக்கில் தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வருகின்றனர்.மாகாண இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளராகக் கடமையாற்றும் பந்துல என்பவர் அரச சேவையிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர்,வடக்கு ஆளுநரின் சம்மதத்துடன் ஒரு வருட சேவை நீடிப்பு வழங்கி,மாகாண இறைவரித் திணைக்களத்திற்கு நியமித்தனர்.

அவரின் பதவிக்காலம் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்த நிலையில், அவருக்கு மீண்டும் சேவை நீடிப்பு வழங்குவதற்கு,வடமாகாணப் பிரதம செயலாளரும், வடக்கு ஆளுநரும் நடவடிக்கை மேற்கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடமாகாணத்தில் குறித்த பதவிக்குத் தகுதியான அதிகாரிகள் பலரும் இருக்கும் நிலையில்,அனுராதபுரத்திலிருந்து பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த ஒருவரை அதுவும், அரச சேவையிலிருந்து ஓய்வுபெற்றவருக்கு சேவைநீடிப்பு வழங்குவதன் நோக்கம் என்ன?

யுத்தகாலத்தில் கூட,அனைத்துத் துறைகளிலும் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கடமையாற்றிய நிலையில்,சிறந்த நிர்வாகத்தையும்,சிறந்த பொறுப்புகளையும் மேற்கொள்ள முடிந்தது.ஆனால் இன்று,தமிழ் அதிகாரிகளை தமது அரசியல் நோக்கத்திற்காக உயர் பதவிகளில் அமர்த்தாமல்,மத்திய அரசாங்கம் தமக்கேற்ற வகையில்,பெரும்பான்மையின அதிகாரிகளை வடக்கில் நியமனம் செய்கின்றது.

அந்த வகையில்,வட மாகாண சுகாதாரப் பணிப்பாளராக தற்போது கடமையாற்றும் திலீப் லியனகேயை விடவும்,சேவை மூப்புக் கொண்ட தமிழ் அதிகாரிகள் பலர் வடக்கில் இருக்கும் நிலையில்,பெரும்பான்மையினத்தவராகிய திலீப் லியனகேயை குறித்த பதவிக்கு அரசாங்கம் நியமித்தது.எனவே,வடக்கு மாகாண அரச நிர்வாகங்களில்,திட்டமிட்ட முறையில் சிங்கள பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் தொடர்ந்தும் நியமிக்கப்படுவதை, வடக்கு ஆளுநர் தடுக்க வேண்டும்.அவ்வாறு செய்யாது விடின்,வட மாகாண சபையின் செயற்பாடுகளை முற்றாக முடக்கி, கட்சி பேதமின்றிப் போராட்டம் நடத்துவோமெனவும்,அவர் மேலும் தெரிவித்தார்

CATEGORIES
Share This